மாணவியை கிண்டல் செய்ததோடு... கீழே தள்ளி தலையில் பைக்கை ஏற்றி நசுக்கி கொன்ற இளைஞர்கள்
லக்னோ: 16 வயது மாணவியை கேலி கிண்டல் செய்த இளைஞர்கள், அந்த மாணவியை கீழே தள்ளி தலையில் பைக்கை ஏற்றிக் கொலை செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சுல்தான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.
மாணவியை பள்ளியிலிருந்து சைக்ளில் வீடு திரும்பி வரும் வழியில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் வழிமறித்து கிண்டல் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.
கூச்சலிட்ட மாணவி
இப்படித்தான் கடந்த 8-ம் தேதியும் அதேபோல, மாணவி சைக்கிளில் பள்ளியில் இருந்து திரும்பும் போது இளைஞர்கள் கிண்டல் செய்துள்ளார்கள். இதனால் மாணவி உடனே கூச்சலிட்டுள்ளார். இதனால், அங்குள்ள பலர் திரண்டதால் அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
மாணவிக்கு பாலியல் தொல்லை
பின்னர் கூட்டம் கலைந்த பின்னர் மாணவியை பின்தொடர்ந்த அவர்கள் மீண்டும் கிண்டல் செய்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவி சப்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் மாணவியை கீழே தள்ளி, பெண்ணின் தலையில் இருசக்கர வாகனத்தை ஏற்றி நசுக்கியுள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் படுகாயம்
இதில் ரத்தவெள்ளத்தில் படுகாயம் அடைந்த மாணவியை மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் போலீஸ் எப்.ஐ.ஆர் இல்லாமல் சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறியுள்ளனர். இதற்கிடையே, பெண்ணின் தாத்தா லம்புவா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், புகாரை வாங்க மறுத்த போலீசார, சம்பவம் நடந்த 3 நாட்களுக்குப் பிறகு அதாவது கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.
போலீஸ் வழக்குப்பதிவு
இதற்கிடையே தலையில் படுகாயம் அடைந்து, உயிருக்குப் போராடிய மாணவி சிகிச்சை பலனின்றி கடந்த 14-ம் தேதி மாணவி உயிரிழந்தார். இதனிடையே மாணவி உயிரிழந்த பின்னர் தான் போலீசார் புகாரை வாங்க மறுத்த விவகாரமும், மாணவி இளைஞர்களால் கொல்லப்பட்ட விவாகரமும் வெளிச்சத்து வந்துள்ளது. இளம் பெண்ணுக்கு உத்தரப்பிரதேசத்தில்நடந்த இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.