முக்தி கொடுப்பதாக உயிருடன் ஒருவருக்கு சமாதி கட்டிய சாமியார்கள்.. உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் முக்தி நிலையை அடைய வைப்பதாக கூறி உயிருடன் ஒருவரை சமாதி கட்டிய விவகாரத்தில் 3 சாமியார்கள் கைது செய்யப்பட்டனர்.
மனித இலக்குகள் எனப்படும் புருஷார்த்தங்கள் மொத்தம் 4 வகைப்படும். அவை தர்மம், செல்வம், இன்பம், வீடு பேறு. இதில் கடைசி நிலைதான் மோட்சம். இந்த துறவு நிலையை அடைய அதற்கு முந்தைய பாதையான இல்லறம் என்பது அவசியமானது.
இல்லறத்தில் கர்மயோக வாழ்வில் பக்குவப்பட்ட பின்னரே அவர் துறவு வாழ்க்கைக்கு தயாராகிறார். துறவு வாழ்க்கையில் பக்குவப்பட்டு இறுதியான இலக்கான மோட்சம் அதாவது வீடு பேற்றை அடைகிறார்.
மறுபிறவி
இது மறுபிறவி இல்லாத நிலையாகும். இதுவே இந்து சமயத்தில் பொதுவாக உரைக்கப்பட்ட பாதையாக கூறப்படுகிறது. இது போன்ற மோட்சம் கொடுப்பதாக ஒருவருக்கு சமாதி கட்டிய சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னவில் நடந்தது. உன்னவ் மாவட்டத்தில் உள்ளூர் சாதுக்களால் இந்த சம்பவம் நடந்தது.
3 சாதுக்கள்
ஒருவருக்கு முக்தி தருவதாக இந்த 3 சாதுக்களும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பள்ளம் தோண்டி அந்த நபரை உயிருடன் உட்கார வைத்து அதன் மேல் மூங்கில் கொம்புகளை போட்டு அதற்கு மேல் களிமண்ணை போட்டு புதைத்துள்ளனர். இந்த சம்பவம் உன்னவ் மாவட்ட போலீஸாருக்கு தெரியவந்தது.
பள்ளம்
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அங்கிருந்த சாதுக்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஒரு இடத்தில் பள்ளம் வெட்டி எதையோ புதைத்தது போல் இருந்தது. இதையடுத்து அந்த பள்ளத்தை தோண்டினர். அப்போது அதில் ஒரு நபர் இருப்பதை கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த பள்ளத்தில் இறங்கிய போலீஸார் அவரை காப்பாற்றி மேலே கொண்டு வந்தனர்.
3 சாதுக்கள் கைது
ஆனால் அந்த நபர் மேலே வர மறுத்தார். எனினும் போலீஸார் அவரை அலோக்காக தூக்கி கொண்டு வந்தனர். இதையடுத்து சமாதி நிலையை அடைய விரும்பிய நபர் மீது சாதுக்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 3 சாதுக்களை கைது செய்தனர். போலீஸார் சரியான நேரத்திற்கு வந்து அந்த நபரை காப்பாற்றியதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள். ஒரு வேளை இந்த சமாதி விவகாரம் போலீஸாருக்கு தெரியாமல் போயிருந்தாலோ இல்லை வருவதற்கு தாமதம் ஏற்பட்டிருந்தாலோ என்ன நடந்திருக்கும்?