ஈவ் டீசிங் காமுகனை போலீசிடம் சண்டை போட்டு மிரட்டி அழைத்து போன உ.பி. பாஜக எம்.எல்.ஏ. குடும்பம்!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக எம்.எல்.ஏ.வும் அவரது மகனும் ஈவ் டீசிங் புகாரில் கைது செய்யப்பட்ட காமுகனை போலீசாரிடம் சண்டை போட்டு மீட்டுச் செல்லும் வீடியோ பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸில் தலித் பெண், கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அத்துடன் அந்த பெண்ணின் குடும்பத்துக்கே சொல்லாமல் அவரது உடலையும் போலீசாரே எரியூட்டிய சம்பவம் தேசத்தையே கொந்தளிக்க வைத்தது.
உத்தரப்பிரதேச மாநில பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில் அடுத்தடுத்து பலாத்கார சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. ரேஷன் கடை தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில் ஆளும் பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு அப்பாவி சுட்டுக் கொல்லபட்டார்.
இப்படி ஒவ்வொருநாளும் உத்தரப்பிரதேச பாஜக அரசின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு எல்லாம் உச்சமாக ஈவ் டீசிங் செய்த காமுகன் ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஆனால் அந்த காமுகனை உ.பி. பாஜக எம்.எல்.ஏ. லோகேந்திர பிரதாப்சிங்கும் அவரது மகனும் போலீசாரை மிரட்டி சண்டை போட்டு மீட்டுச் சென்றிருக்கின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையாகி உள்ளது.
லக்மிபூர் அருகே முகம்மதி காவல்நிலையத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இப்படி ஒரு வீடியோ வைரலாகியும் அப்படி எல்லாம் ஒரு சம்பவமே நடக்கவில்லை என சாதித்துக் கொண்டிருக்கிறார் பாஜக எம்.எல்.ஏ. இதனால் உபி அரசு மீதான விமர்சனங்கள் மேலும் அதிகரித்திருக்கிறது.