பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. போலீஸ் ஸ்டேஷன் போகும் வழியில் தீ வைத்து கொளுத்தப்பட்ட கொடூரம்
உத்தர பிரதேசத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண், போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க செல்லும் போது, தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளார்.
Recommended Video
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண், போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க செல்லும் போது, தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான அநீதிகளும், பாலியல் துன்புறுத்தல்களும் இப்போதெல்லாம் அதிகமாகிவிட்டது. இந்த நிலையில்தான் அங்கு பெண் ஒருவர் தீ வைத்து கொளுத்தப்பட்டு இருக்கிறார்.
உத்தர பிரதேசத்தின் சீதாபூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த பெண் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
என்ன நடந்தது
உத்தர பிரதேசத்தின் சீதாபூரை சேர்ந்த அந்த 28 வயது பெண், கடந்த வாரம் வெளியே செல்லும் போது ராமு மற்றும் ராஜேஷ் என்ற இரண்டு இளைஞர்களால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார். இயற்கை உபாதையை கழிப்பதற்காக அவர் காட்டிற்கு செல்லும் போது இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.
புகார் எடுக்கவில்லை
இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்க அந்த பெண் முயன்றுள்ளார். இரண்டு முறை இதற்காக அவர் போலீஸ் நிலையம் சென்றுள்ளார். ஆனால் இரண்டு முறையும் அந்த பெண்ணின் புகாரை போலீசார் எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
கொளுத்தினார்கள்
இந்த நிலையில் மூன்றாவது முறை அந்த பெண் நேற்று போலீஸ் நிலையம் செல்லும் போது ராமு மற்றும் ராஜேஷால் தடுக்கப்பட்டு இருக்கிறார். சாலை ஓரத்தில் ஆள் இல்லாத இடம் பார்த்து அந்த பெண்ணை தூக்கி சென்று மண்ணெண்ணெய் ஊற்றி அந்த பெண்ணுக்கு தீ வைத்துள்ளனர். ராமு, ராஜேஷ் எஸ்கேப் ஆகவே அருகாமையில் இருந்தவர்கள் அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர்.
விசாரணை
தற்போது அந்த பெண் மருத்துவமனையில் 65 சதவிகித காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார். அந்த பெண் கொடுத்த புகாரை எடுத்துக் கொள்ளாத போலீசார் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ராமு மற்றும் ராஜேஷ் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.