உ.பியில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து: குழந்தைகள் உள்பட 27 பேர் பலி.. கோவிலுக்கு சென்றபோது சோகம்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த போது டிராக்டர் குளத்துக்குள் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் டிராக்டர் தொட்டியில் பயணித்த பெண்கள் குழந்தைகள் என 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உன்னோ நகரில் பிரசித்தி பெற்ற சந்திரிகா தேவி கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான மக்கள் குடுமத்தினருடன் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். அந்த வகையில் இன்று 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் அந்த கோவிலுக்கு வழிபடுபடுவதற்காக புறப்பட்டனர்.
பெண்கள் குழந்தைகள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் டிராக்டரின் பின் தொட்டியில்(டிராலி) இருந்தபடி சென்றுகொண்டிருந்தனர். கான்பூர் மாவட்டத்தில் உள்ள கதம்பூர் பகுதியில் டிராக்டர் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையில் டிராக்டர் தாறுமாறாக ஓடியது. முழுவதுமாக கட்டுப்ப்பாட்டை இழந்ததால் சாலையோரம் உள்ள குளத்தில் டிராக்டர் தலைக்குப்புற கவிழ்ந்தது.
டிராக்டர் தொட்டி அப்படியே தலை கீழாக கவிழ்ந்ததால் அதில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயமடைந்தனர். இதில் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் அபயக்குரல் எழுப்பினர். எனினும் இந்த பயங்கர விபத்தில் டிராக்டரில் வந்த பெண்கள் குழந்தைகள் என 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு சென்றபோது டிராக்டர் கவிழ்ந்து பென்கள் குழந்தைகள் உள்பட 27 பேர் பலியான சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.