பலாத்காரமே நடக்கலை.. கவுரவக் கொலைதான்.. நாங்கள் அப்பாவிங்க.. புதுசாக குழப்பும் ஹத்ராஸ் குற்றவாளி
லக்னோ: பலாத்காரமே நடக்கவில்லை, கவுரக் கொலைதான் நடந்துள்ளது. நாங்கள் அப்பாவிகள் என ஹத்ராஸ் இளம்பெண் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயது தலித் இளம்பெண் ஒருவர் மேல் ஜாதியை சேர்ந்த 4 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டு மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தை எதிர்க்கட்சிகள் கண்டிக்கின்றன. இந்த நிலையில் நடந்தது என்ன என்பது குறித்து முக்கிய குற்றவாளி சந்தீப் கடிதம் மூலம் வெளியிட்டுள்ளார்.
ஹத்ராஸ் தலித் பெண்ணுக்கும் பலாத்கார குற்றவாளிக்கும் இடையே போனில் தொடர்பு.. சொல்கிறது உ.பி. போலீஸ்
4 பேர்
கைது செய்யப்பட்ட சந்தீப், ரவி, லவகுசா, ராமு ஆகிய 4 பேரும் மாவட்ட கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதியிருந்தனர். அந்த கடிதத்தில் நான் அந்த பெண்ணை சம்பவத்தன்று வயலில் பார்த்தேன். அப்போது அந்த பெண்ணின் தாயும், சகோதரனும் உடனிருந்தார்கள். நானும் உடனடியாக அந்த இடத்தைவிட்டு சென்று எனது வீட்டுக்குச் சென்றுவிட்டேன்.
அப்பாவிகள்
அதன் பின்னர்தான் கிராமத்தினர் மூலம் நான் தெரிந்து கொண்டேன், என்னுடன் நட்பாக இருந்ததற்காக அந்த பெண்ணை அவரது தாயும் சகோதரனும் கடுமையாக அடித்து தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்து அவர் இறந்துவிட்டார். நாங்கள் அவரை கொல்லவும் இல்லை, எந்த தவறும் செய்யவில்லை, நாங்கள் அப்பாவிகள்.
கடிதம்
எனவே இது முற்றிலும் கவுரக் கொலையாகும். நாங்கள் ஏழைகள் என்பதால் எங்களை உத்தரப்பிரதேச போலீஸார் இந்த வழக்கில் சிக்க வைத்துவிட்டார்கள். எனக்கும் அந்த பெண்ணுக்குமான நட்பை தவறாக புரிந்து கொண்டு அந்த பெண்ணின் பெற்றோரே அவரை கொலை செய்துவிட்டார்கள் என அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.
தடயவியல் துறை
இந்த சம்பவம் குறித்து அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் தடயவியல் துறை அதிகாரிகள் கூறுகையில் ஹத்ராஸ் விவகாரத்தில் பாலியல் பலாத்காரம் செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. பெண்ணின் பிறப்புறுப்பில் பலாத்காரம் செய்ததற்கான எந்த அடையாளங்களும் இல்லை. அந்த பெண்ணுக்கு கழுத்து, முதுகு பகுதிகளில் மட்டுமே காயம் இருந்தது என்றார்கள்.