அகிலேஷ் தடுக்கப்பட்ட விவகாரம்.. ஆளுநரிடம் இன்று புகார் அளிக்க எஸ்பி, பிஎஸ்பி கட்சிகள் முடிவு
லக்னோ:விமான நிலையத்தில் அகிலேஷ் யாதவ் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் இன்று ஆளுநரை சந்தித்து மனு அளிக்க உள்ளன.
லக்னோவில் இருந்து விமானம் மூலம், அலகாபாத் செல்ல சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் திட்டமிட்டிருந்தார். அலகாபாத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவைத் தலைவர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அவர் திட்டமிட்டிருந்தார்.
அதற்காக, லக்னோ விமானநிலையத்துக்கு வந்த அகிலேஷ் யாதவை அதிகாரிகள் விமானம் ஏறவிடாமல் தடுத்து, அலகாபாத் செல்ல அனுமதி மறுத்துவிட்டனர்.சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை முன் வைத்து அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதையறிந்த அக்கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரப் பிரதேசத்தின் பல பகுதிகளிலும் நடைபெற்ற போராட்டத்தில் மோதல் எழுந்தது. இதே விவகாரம்.. உத்தரப்பிரதேச சட்டசபையில் கடும் அமளியை ஏற்படுத்தியது.
அதற்கு பதிலளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவ் கலந்து கொள்ள இருக்கும் பல்கலைக் கழகத்தில் மாணவர்களில் இரு பிரிவினரிடையே மோதல் எழும் நிலை இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விளக்கம் அளித்தார். ஆனால் அந்த விளக்கத்தை சமாஜ்வாதி கட்சி ஏற்கவில்லை.
இந் நிலையில் உ.பி அரசின் இந்த செயல்பாடு குறித்து சமாஜ்வாதி கட்சி ஆளுநரிடம் புகார் தெரிவித்த முடிவு செய்தது. அதற்காக ஆளுநரை இன்று நேரில் சந்தித்து அதற்கான புகார் மனுவை அளிக்கிறது.
அவர்களுடன் கூட்டணி கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகளும் செல்கின்றனர். இரு தரப்பு பிரதிநிதிகளும் இணைந்தே 15 பேர் கொண்ட குழுவினர் ஆளுநரை சந்தித்து எழுத்துப்பூர்வமாக புகார் மனு ஒன்றை அளிக்க உள்ளனர்.