பாஜகவுக்கான கதவுகளை மூடியாச்சு.. அந்த விஷயத்துல முதல் முதல்வர் யோகிதான்.. போட்டுத் தாக்கும் அகிலேஷ்
லக்னோ: உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் விவசாயிகள் பாஜகவுக்கு கதவுகளை மூடி விட்டனர் எனவும், தன் மீதான வழக்குகளை திரும்பப் பெற்ற மாநிலத்தின் முதல் முதல்வர் யோகி ஆதித்யநாத் தான் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அடுத்தடுத்து தாக்குதல்களை தொடுத்து வருகிறார்.
உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய வட மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இவை தவிர மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களும் தேர்தல்களை எதிர்கொள்ளப் போகின்றன. உத்தரபிரதேச சட்டசபை மொத்தம் 403 தொகுதிகளை உள்ளடக்கியது. எனவே குறைந்தபட்ச பெரும்பான்மை பெறுவதற்கு 202 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டியது அவசியம்.
பாஜக சதி.. டெல்லியில் என் ஹெலிகாப்டரை நிறுத்திட்டாங்க.. அகிலேஷ் யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு
பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் உத்திர பிரதேச தேர்தலில் தனித்தனியாக பலப் பரிட்சை நடத்துகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்திரபிரதேசத்தை யார் வெல்ல இருக்கிறார்கள் என பல தரப்பினரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
உத்தரப்பிரதேச தேர்தல்
தற்போது உத்தரபிரதேசத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 10, 14, 20, 23, 27 மற்றும் மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் ஜுரம் தொற்றிக் கொண்டுள்ளது. பிரச்சாரங்கள், வேட்பாளர் தேர்வு என மும்முரம் காட்டி வரும் நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக இருந்த போதும் எப்படியாவது மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை நிலைநிறுத்த வேண்டும் என அகிலேஷ் யாதவ் பல்வேறு வியூகங்களை வகுத்து பாஜக அமைச்சர்களை தூக்கி வருகிறார்.
அகிலேஷ் யாதவ் மும்முரம்
2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 325 தொகுதிகளில் வெற்றி பெற்று அசத்தியது. யோகி ஆதித்யநாத் தலைமையில் அங்கு ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அங்கு மீண்டும் களம் கண்கிறார் யோகி.தற்போது ஆளும் கட்சியான பாஜக ஆட்சி தக்க வைப்பதற்கு பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ் பல்வேறு பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறார். நாள்தோறும் அறிக்கைகள், பேட்டிகள் என ஆளும்கட்சிக்கு நெருக்கடியில் கொடுத்து வரும் அகிலேஷ் தற்போது பாஜகவையும் , முதல்வர் யோகியையும் நேரடியாக தாக்கி வருகிறார்.
பாஜகவுக்கான கதவுகள்
இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய அகிலேஷ் யாதவ் விவசாயிகளை ஜீப்கள் மூலமாக கொலை செய்வார்கள் என யாராவது நினைத்தார்களா எனவும், பாஜக இங்கு விவசாயிகளை அவமதித்தது அவர்கள் மீது தடியடி நடத்தியதில் பலர் கொல்லப்பட்டனர் எனவும் பாஜக தலைவர்கள் விவசாயிகளை பயங்கரவாதிகள் மற்றும் குண்டர்கள் என அழைத்தனர் என கூறிய அகிலேஷ் யாதவ், விவசாயிகள் இந்த முறை பாஜகவுக்கான கதவுகளை அடைத்து விட்டனர் எனவும், பெரிய விவசாயிகளின் போராட்டம் குறித்து மத்திய அரசின் பதில் விவசாயிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது எனவும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவோம் எனக் கூறினார்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து பேசிய அகிலேஷ் யாதவ், நாங்கள் சட்டம்-ஒழுங்கை மிகத்தீவிரமாக எடுத்துக்கொள்வோம் எனவும் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேலும் உத்தர பிரதேசத்தில் இரண்டு பேர் மட்டுமே அரசாங்கத்தை நடத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டை மறுத்த அவர் மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் காலத்தில் நடந்த குற்றங்களை எடுத்துக் கூறியதோடு ஹத்ராஸ் பாலியல் பலாத்கார வழக்கு மற்றும் கோரக்பூரில் காவல்துறையால் கொல்லப்பட்ட தொழிலதிபர் பற்றி குறிப்பிட்டார் . வேலை கேட்டு போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மீது பாஜக அரசு அடக்கு முறைகளை நடத்தியதாக குற்றம் சாட்டிய அகிலேஷ் யாதவ் தனக்கு எதிராகவும் துணைவேந்தருக்கு எதிராகவும் போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்ற மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் தான் என கடுமையாக சாடினார்.