செம்ம.. யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக பிராமணர் வேட்பாளரை நிறுத்த அகிலேஷ் ஸ்கெட்ச்
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக பிராமணர் ஒருவரை வேட்பாளராக நிறுத்த சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் பிப்ரவரி 10-ந் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இத்தேர்தலில் கோரக்பூர் நகர்புற தொகுதியில் பாஜக வேட்பாளராக முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் எதிர்கொள்ளும் முதல் சட்டசபை தேர்தல் இது. கோரக்பூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு பல முறை வெற்றி பெற்றவர் யோகி ஆதித்யநாத். தற்போது உ.பி. சட்ட மேலவை உறுப்பினராக இருக்கிறார்.
கோரக்பூர் தொகுதியில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து தலித்துகள் தலைவரான பீம் ஆர்மியின் சந்திரசேகர் ஆசாத் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. இதனிடையே யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து சமாஜ்வாதி கட்சியின் சார்பில் பிராமணர் ஒருவரை வேட்பாளராக நிறுத்த அகிலேஷ் யாதவ் வியூகம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.
'நானே ஒரு பிராமணர் தான்.. எனக்கு யாரும் நற்சான்றிதழ் தர தேவையில்லை..' கோவா தேர்தல்.. விளாசும் மம்தா
முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது தொடக்கம் முதலே பிராமணர் சமூகம் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறது. உ.பி.யில் காங்கிரஸ் அல்லது பாஜக தேர்தலில் வென்றால் பிராமணர்களையே முதல்வராக்கப்படுவர். ஆனால் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத்தை பாஜக முதல்வராக்கியதை பிராமணர்கள் ஏற்கவில்லை. அத்துடன் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் பிராமணர்கள் ஒடுக்குமுறையை எதிர்கொண்டனர்; என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்கிற அதிருப்தி நீண்டகாலமாக நிலவுகிறது.
Recommended Video
இதனால் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக பிராமணர் ஒருவரை வேட்பாளராக நிறுத்த அகிலேஷ் யாதவ் திட்டமிட்டுள்ளாராம். பாஜகவின் மாநில துணைத் தலைவராக இருந்த மறைந்த உபேந்திரா தத் சுக்லாவின் மனைவி சுபாவதி சுக்லாவை யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக அகிலேஷ் களமிறக்க வாய்ப்புள்ளதாம். சுபாவதி சுக்லாவின் 2 மகன்களும் நேற்று சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர். கிழக்கு உ.பியில் உள்ள கோரக்பூர் தொகுதிக்கு மார்ச் 3-ல் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதியில் பாஜகவின் ராதா மோகன் தாஸ் அகர்வால் சிட்டிங் எம்.எல்.ஏவாக உள்ளார். இவர் 4 முறை கோரக்பூர் தொகுதியில் வெற்றி பெற்றவர்.