ஹத்ராஸ் கொடுமை: தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம்! உ.பி. அரசுக்கு நோட்டீஸ்
லக்னோ: ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை நிகழ்வு தொடர்பாக உத்தரப்பிரதேச மாநில அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் 4 கொடூரன்களால் கடந்த மாதம் 14-ம் தேதி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மேலும், நடந்த நிகழ்வை யாரிடமும் சொல்லாத வகையில் அந்தப் பெண்ணின் நாக்கை அறுத்ததோடு உடல்ரீதியாகவும் கடுமையாக தாக்கப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அந்தப் பெண் மீட்கப்பட்டு ஜவஹர்லால் நேரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரது உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து டெல்லி சப்தர் ஜங் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். முதுகுத்தண்டு முறிவடைந்த நிலையில் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன் தினம் செவ்வாய்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விவகாரத்தில் உ.பி. காவல்துறை மிக மெத்தனமாக செயல்படுவதாகவும் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியும் பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்கள் அனுமதியின்றி மகளின் உடலை உ.பி.போலீஸார் எரியூட்டியதாக அந்தப் பெண்ணின் பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.
இதையடுத்து இந்த விவகாரம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. மேலும், உயிரிழந்த பெண்ணின் உடற்கூராய்வு விவகாரத்தில் மாறுபட்ட கருத்து நிலவுவதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கு ஆறுதல் கூறுவதற்காக இன்று ஹத்ராஸ் சென்ற நிலையில் அவரை மறித்து திருப்பி அனுப்பியது உ.பி. போலீஸ்.
ஹத்ராஸ் சென்ற ராகுல், பிரியங்கா காந்தி எந்த சட்டத்தின் கீழ் கைது?
ஏற்கனவே இது தொடர்பாக உத்தரப்பிரதேச மாநில பாஜக அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்றக் கிளையும் உ.பி.அரசுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. உ.பி. மாநில டி.ஜி.பி., மாவட்ட எஸ்.பி., சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி உள்ளிட்டோர் அக்டோபர் 12-ம் தேதிக்குள் பதில் அளிக்கக்கோரி தாமாக முன்வந்து நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இதனால் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கை ஒட்டுமொத்த தேசமும் உன்னிப்பாக கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.