என்ன இவருக்கும் தொடர்பு இருக்கிறதா? அம்ரபலி ரியல் எஸ்டேட் மோசடி.. சிக்கலில் மாட்டுகிறார் தோனி!
அம்ரபலி கட்டிட நிறுவன மோசடி வழக்கில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சிக்கி இருக்கிறார்.
லக்னோ: அம்ரபலி கட்டிட நிறுவன மோசடி வழக்கில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சிக்கி இருக்கிறார். இது தொடர்பாக விசாரணை அதிகாரிகள் இவரிடம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது.
உத்தர பிரதேசத்தில் இருக்கும் அம்ரபலி குரூப் நிறுவனம், இந்தியா முழுக்க பல்வேறு நிறுவனங்களை, வியாபார அமைப்புகளை நடத்தி வருகிறது. நாடு முழுக்க பல இடங்களில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களை அம்ரபலி நடத்தி வருகிறது.
இது இல்லாமல் மால்கள், வியாபார தளங்கள், ஐடி நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள் என்று பல நிறுவனங்களை இந்த அம்ரபலி நிறுவனம் வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இந்த நிலையில்தான் சில வருடங்களுக்கு முன் அம்ரபலி நிறுவனம் மோசடி வழக்கில் சிக்கியது.
என்ன வழக்கு
நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா ஆகிய இரண்டு நகரங்களில் அம்ரபலி குழுமம் மூலம் அப்பார்மெண்ட்கள் கட்டப்படுத்தவதற்கான அனுமதி வாங்கப்பட்டு இருக்கிறது. இதற்காக வீடு வாங்கும் வாடிக்கையாளர்களிடம் பணமும் வாங்கி உள்ளது. அதன்படி 2006ல் அம்ரபலி நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்கி, அவர்களுக்கு அப்பார்ட்மெண்ட் கட்டி தருவதாக ஒப்பந்தம் போட்டுள்ளது.
சிலர் என்ன செய்தனர்
இன்னும் சிலரிடம் நேரடியாக பணம் வாங்காமல், வங்கி மூலம் லோன் வாங்கி இருக்கிறது. அதன்படி வங்கி நேரடியாக லோன் பணத்தை அம்ரபலி நிறுவனத்திற்கு கொடுக்கும். அம்ரபலி நிறுவனம் வீட்டை கட்டும், அதற்கு வீடு வாங்க போகும் மக்கள் கடன் அடைப்பார்கள். இதுவரை முறையாக எல்லாம் நடந்து இருக்கிறது. ஆனால் 2006ல் பணத்தை வாங்கிய அம்ரபலி நிறுவனம் இதுவரை ஒரு வீட்டை கூட கட்டவில்லை.
எத்தனை பேர்
ஆம் கிட்டத்தட்ட 13 வருடங்களாக அம்ரபலி நிறுவனம் யாருக்கும் வீடு கட்டிக் கொடுக்காமல் ஏமாற்றி இருக்கிறது. இதன் மூலம் மொத்தம் 2500 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த 2500 பேரும்தான் தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இதையடுத்து அம்ரபலி நிறுவனத்தின் சேர்மேன் உள்ளிட்ட நிர்வாகிகளை உடனடியாக கைது செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடவடிக்கை
அதேபோல் இவர்களுக்கு சொந்தமான முறைகேடான சொத்துக்களை முடக்கவும், அம்ரபலி குழுமம் கட்டிய வீடுகள் குறித்து விசாரிக்கவும். நொய்டாவில் இந்த நிலம் வாங்கப்பட்டது எப்படி, லோன் கிடைத்தது எப்படி என்பது குறித்து விசாரித்து, அறிக்கையை சமர்ப்பிக்கவும் தற்போது உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தோனி
இந்த அம்ரபலி குழுமமானது, அம்ரபலி மஹி டெவலப்பர்ஸ் நிறுவனம் மற்றும் ரித்தி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மேண்ட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு முறைகேடாக பணம் அனுப்பி உள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் தோனியின் மனைவி சாக்ஷிதான் இயக்குனர். இந்த இரண்டு நிறுவனத்திலும் தோனிக்கு பெரிய அளவில் பங்குகள் இருக்கிறது. இதனால்தான் தோனி தற்போது சிக்கலில் மாட்டி இருக்கிறார்.
பண மோசடி
அதன்படி மக்களிடம் பெற்ற பணத்தை வீடு கட்ட பயன்படுத்தாமல், இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் அம்ரபலி குழுமம் அனுப்பி உள்ளது. அதை வைத்துதான் இந்த இரண்டு நிறுவனங்கள் இத்தனை நாட்கள் இயங்கி உள்ளது. இதன் மூலம் கருப்பு பணத்தை வெள்ளையாக்கி, ஏமாற்றி வியாபாரம் செய்து இருக்கிறார்கள். மக்கள் பணம் மூலம் இந்த நிறுவனங்கள் இயங்கி உள்ளது. மக்களுக்கு வீடு கட்டி கொடுக்காமல் ஏமாற்றி இருக்கிறார்கள் என்று புகார் எழுந்துள்ளது.
விரைவில் விசாரணை
இதனால் விரைவில் அம்ரபலி மஹி டெவலப்பர்ஸ் நிறுவனம் மற்றும் ரித்தி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மேண்ட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களை அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தோனி, சாக்ஷி ஆகியோரும் இதில் விசாரணை செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.