இப்படி எல்லாம் கூட மரணம் வருமா! ஜன்னலை பிளந்து கொண்டு வந்த இரும்பு ராட்! ஜன்னல் சீட் பயணி பரிதாப பலி
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் நடந்த வினோதமான விபத்தில் ரயிலில் ஜன்னல் சீட்டில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உலகத்திலேயே மிகப் பெரிய ரயில் நெட்வொர்க்களில் ஒன்றாக இந்திய ரயில்வே உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய ரயில்வேவுக்கு மிகவும் விரிவான ஒரு கட்டமைப்பு உள்ளது.
மேலும் பேருந்து, விமானம் உள்ளிட்டவற்றுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் ரயில் கட்டணம் ரொபம்வே குறைவு.. இதன் காரணமாக இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.
2 மாதத்தில் இது 4வது முறை! மோடி துவக்கிய காந்திநகர்-மும்பை வந்தேபாரத் ரயில் மீண்டும் விபத்து.. ஏன்?
சரக்கு ரயில்
அதேபோல சரக்கு ரயில் சேவையிலும் இந்தியா ரயில்வே முக்கியமான ஒன்றாக உருவெடுத்துள்ளது. இந்தாண்டில் இதுவரை மட்டும் இந்திய ரயில்வே சரக்கு போக்குவரத்து மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளது. இப்படி இந்திய ரயில்வே பல வகையில் சிறப்பாகவே செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. அதேநேரம் இந்திய ரயில்வே மீது ஒரு விமர்சனமும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதாவது இந்திய ரயில்வே இன்னுமே பழங்கால தொழில்நுட்பத்தைக் கொண்டே இயங்கி வருவதாகச் சாடி வருகின்றனர்.
இந்திய ரயில்வே
ஐரோப்பிய நாடுகள் உட்படப் பல நாடுகளில் அதிவேக ரயில் சேவைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் பல ஆண்டுகளாகவே ரயிலின் வேகம் பெரியளவில் அதிகரிக்கவில்லை. இது ரயில் பயணிகளுக்குச் சற்றே அயர்ச்சி தருவதாக உள்ளது. மேலும், பாதுகாப்பு விஷயங்களிலும் கூட இந்திய ரயில்வே முறையாகச் செயல்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. ரயில்வே பராமரிப்பு மற்றும் கட்டுமான பணிகளின் போது முறையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பின்பற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளதை மறுக்க முடியாது.
மரணம்
இதற்கிடையே உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரொம்பவே வினோதமான ரயில் விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் படிக்கும் பலரும் இதுபோல எல்லாம் ஒருவருக்கு மரணம் வருமா என்று வேதனைப்படுகிறார்கள். டெல்லியில் இருந்து கான்பூருக்கு சென்று கொண்டிருந்த நிலனாச்சல் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை வழக்கம் போல பிரயாக்ராஜ் அருகே உள்ள தன்வார் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது தான் காலை 8.45 மணியளவில் இந்த மோசமான விபத்து அரங்கேறியுள்ளது.
ஜன்னல்
அதாவது பயணி ஒருவர், இந்த நிலனாச்சல் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜன்னல் அருகே அமர்ந்து பயணித்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக வெளியே இருந்த இரும்பு ராட் ஒன்று ஜன்னலைப் பிளந்து கொண்டு வந்த இந்த நபரின் கழுத்தைத் துளைத்துள்ளது. இதில் அந்த நபர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ஜன்னல் கண்ணாடி மூடியே இருந்துள்ளது. இருப்பினும், அந்த இரும்பு ராட் ஜன்னலைக் கண்ணாடியை உடைத்துக் கொண்டு பாய்ந்துள்ளது.
ஷாக் படங்கள்
உயிரிழந்த நபர் ஹரிகேஷ் குமார் துபே என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த நபர் தனது இருக்கையில் ரத்த வெள்ளத்தில் கண்களை மூடியவாறு அமர்ந்திருக்கும் ஷாக் படங்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரயில் தண்டவாளப் பணியில் பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பி ரயிலின் ஜன்னலை பிளந்து கொண்டு ரயிலுக்குள் நுழைந்துள்ளது.
என்ன நடந்தது
இந்த இரும்பு ராட் அவரது கழுத்தைத் துளைத்தது. அலிகார் சந்திப்பில் ரயில் நிறுத்தப்பட்டு, அவரது உடல் மீட்கப்பட்டு ரயில்வே போலீஸாரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் பராமரிப்பு அல்லது வேறு எதாவது கட்டுமான பணிகள் நடந்து கொண்டு இருந்து இருக்கலாம். அப்போது எதிர்பாராத விதமாக இந்த இரும்பு ராட் ரயில் ஜன்னலை பிளந்து கொண்டு உள்ளே பாய்ந்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என இந்திய ரயில்வே சார்பில் கூறப்பட்டுள்ளது.