''சோறுபோடும் விவசாயிகள் பயங்கரவாதிகளா""... கங்கனா ரனாவத் உருவப்படத்தை எரித்து பெண்கள் போராட்டம்!
லக்னோ: நடிகை கங்கனா ரனாவத்துக்கு எதிராக உத்தரபிரதேசத்தின் அமேதியில் உள்ள பொது நலக் குழுவைச் சேர்ந்த பெண்கள் போராட்டம் நடத்தினார்கள்.
கங்கனா ரனாவத் விவசாயிகளை பயங்கரவாதிகள் என கூறிவிட்டதாக கண்டனம் தெரிவித்த அவர்கள் அவரது உருவப்படத்தை தீ வைத்து எரித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக : நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
குடியரசு தின அசம்பாவிதம்
டெல்லியில் குடியரசு தினம் அன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி திசை மாறியது. போலீசார் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினார்கள். டெல்லியே பரபரப்பானது. டெல்லியின் பல்வேறு எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆதரவு குரல் வருகிறது.
கிரேட்டா தன்பெர்க், ரிஹானா ஆதரவு
இதற்கிடையே பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சுவீடன் நாட்டைச் சேர்ந்த 17 வயது இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ''இந்தியாவில் போராடி வரும் விவசாயிகளுடன் நாங்கள் இணைந்து நிற்கிறோம்" என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதேபோல் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா, தனது டுவிட்டர் பக்கத்தில், டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக வெளியான செய்தி ஒன்றை பகிர்ந்து "இது குறித்து ஏன் நாம் பேசவில்லை?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கங்கனா ரனாவத் ஆவேசம்
இதற்கிடையே ரிஹானா டுவிட்டுக்கு பதில் தெரிவித்த பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், "அவர்கள் பற்றி யாரும் பேசவில்லை, ஏனெனில், அவர்கள் விவசாயிகள் அல்ல. இந்தியாவை பிளவுபடுத்த முயற்சிக்கும் பயங்கரவாதிகள். அமெரிக்காவை போல பிளவுபட்ட தேசத்தை சீனா தனது காலனி ஆதிக்கத்திற்குள் கொண்டு வர முயற்சிக்கும். பொறுமையாக இருங்கள் முட்டாளே, உங்களை போல நாங்கள் எங்கள் நாட்டை விற்க மாட்டோம்" என மிகக் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி ட்வீட் செய்திருந்தார்.
கங்கனா ரனாவத் உருவப்படம் எரிப்பு
இந்த நிலையில் நடிகை கங்கனா ரனாவத்துக்கு எதிராக உத்தரபிரதேசத்தின் அமேதியில் உள்ள பொது நலக் குழுவைச் சேர்ந்த பெண்கள் போராட்டம் நடத்தினார்கள். கங்கனா ரனாவத் விவசாயிகளை பயங்கரவாதிகள் என கூறிவிட்டதாக கண்டனம் தெரிவித்த அவர்கள் கங்கனா ரனாவத் உருவப்படத்தை தீ வைத்து எரித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
நடிப்பதோடு நிறுத்தி கொள்ளுங்கள்
இது தொடர்பாக பொது நலக்குழுவின் தலைவர் ரீட்டா சிங் கூறுகையில், விவசாயிகளுக்கு எதிராக கங்கனா பயன்படுத்திய மொழி மிகவும் தவறானது. நாங்கள் ஜனாதிபதிக்கு ஒரு குறிப்பை சமர்ப்பித்துள்ளோம். நம் நாட்டின் விவசாயிகள் எல்லையில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் அரசால் துன்புறுத்தப்படுகிறார்கள். கங்கனா ரனாவத் பாடுவதன் மூலமும் நடனமாடுவதன் மூலமும் தனது வாழ்வாதாரத்தை சம்பாதிக்க வேண்டும். அதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். நமது விவசாயிகளை அவமதிக்க கூடாது. இதுபோன்ற செயல்களை அவர் நிறுத்த வேண்டும். இல்லையென்றால் பெரும் விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்றனர்.