இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு நேர்ந்த சோகம்...மயானத்தின் மேற்கூரை இடிந்து 18 பேர் உயிரிழப்பு!
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் மயானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 18 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் பலர் படுகாயம் அடைந்தனர். இதுவரை மொத்தம் 38 பேர் மீட்கப்பட்டனர். மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள முராத்நகர் பகுதியில் மயானம் ஒன்றில் நடந்த இறுதிச்சடங்கில் 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அந்த பகுதியில் பலத்த மழை கொட்டியது.இதனால் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்கள் அங்கு இருந்த மயான கட்டடத்தில் ஒதுங்கினர்.
அப்போது எதிர்பாராதவிதமாக மயானத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அங்கிருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்குள் இருந்து 18 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
அவர்களுக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 38 பேர் மீட்கப்பட்டனர். மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தகுந்த உதவிகளை செய்யும்படி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மத்திய பாதுகாப்பு அமைச்சரும், லக்னோவைச் சேர்ந்த எம்.பி.யுமான ராஜ்நாத் சிங் இந்த சம்பவம் குறித்து வேதனை தெரிவித்ததோடு, பலியானவர்களின் குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்தார்.