காவி உடை அணிந்து காஷ்மீர் இளைஞர்கள் மீது தாக்குதல்… உ.பி. யில் 4 பேர் கைது
லக்னோ: உத்திரபிரதேசத்தில் காஷ்மீர் இளைஞர்களைத் தாக்கிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு நாடு முழுவதிலுமுள்ள காஷ்மீர் மாணவர்கள், வியாபாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இதை கண்காணிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. டாலிகஞ்ச் பகுதியில் காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர்கள் உலர்திராட்சை விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
Also Read | இன்னும் 2 மாசம்தான் ராசா இப்படி பேச முடியும்.. எச். ராஜா போட்ட டிவீட்டுக்கு நெட்டிசன்கள் கிண்டல்
தடிகளைக் கொண்டு தாக்குதல்
அப்போது அங்கு , காவி உடையில் வந்த சிலர், உலர் திராட்சை விற்பனை செய்து வந்த காஷ்மீர் இளைஞர்கள் இருவரை தாக்கியுள்ளனர். முதலில் இங்கு விற்பனை செய்யக்கூடாது என்று கண்டித்து அவர்கள், பின்னர், தடிகளைக் கொண்டு தாக்கினர்.
வீடியோ வைரல்
அப்போது அடி தாங்கமுடியாமல் கதறிய காஷ்மீர் இளைஞர்களை அங்கிருந்த உள்ளூர் இளைஞர்கள் மீட்டனர். மேலும், காஷ்மீர் இளைஞர் மீது நடத்திய தாக்குதலில் வீடியோவாக பதிவு செய்து தங்களது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரல் ஆனது.
முக்கிய குற்றவாளி கைது
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் முக்கிய குற்றவாளியான பஞ்ச்ராங் சோங்கரை கைது செய்தனர். அவர் விசுவ இந்து தள கட்சியின் தலைவர் என கூறப்படுகிறது. மேலும், அவருடன் தொடர்புடைய ஹிமான்சு கார்க், அனிரூத் மற்றும் அமர் குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது மதரீதியாக கலவரத்தை தூண்டுதல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
போலீசார் நடவடிக்கை
தாங்கள் கடந்த 20 ஆண்டுகளாக உலர்திராட்சை விற்பனை செய்து வருவதாகவும், இதற்கு முன்னர் இது போன்ற சம்பவம் நடந்தது இல்லை என கூறிய தாக்குதலுக்கு உள்ளான முகம்மது அப்சல் நிக், தாங்கள் தீவிரவாதிகள் என கூறி அவர்கள் தாக்கியதாக அழுதபடி தெரிவித்தனர். இதற்கிடையே, போலீசாரின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக, தாக்குதலுக்கு உள்ளான காஷ்மீர் இளைஞர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.