டமால் சப்தம்.. என்ன நடந்ததுனே தெரியலை.. லக்னோ விபத்து குறித்து விவரிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் நடந்த விபத்தில் 24 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில் அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததாகவும் என்ன நடந்தது என்றே தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்கள்.
ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து 81 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வாடகைக்கு லாரி அமர்த்தி கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 3.30 மணிக்கு அவ்ரையா என்ற பகுதி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மற்றொரு லாரி இவர்களது லாரி மீது மோதியது.
சற்று எதிர்பாராத இந்த விபத்தில் 24 பேர் பலியாகிவிட்டனர். 17 பேர் காயமடைந்தனர். அவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஒருவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
சிறப்பு ரயிலில் புறப்பட்ட 1,168 வெளிமாநில தொழிலாளர்கள்.. செலவை ஏற்றது புதுச்சேரி அரசு
கவிழ்ந்த லாரி
இந்த விபத்து குறித்து உயிர் பிழைத்த தொழிலாளர்கள் கூறுகையில் டீக்குடிப்பதற்காக ஒரு கடையில் நிறுத்துமாறு கூறினோம். அப்போது டிரைவர் வண்டியை நிறுத்தியதும் டீக்குடிக்க சிலர் இறங்கினர். மேலும் பலர் அதிகாலை நேரம் என்பதால் நாங்கள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இந்த விபத்து நடந்து நாங்கள் பயணித்த லாரி கீழே கவிழ்ந்தது. சுண்ணாம்பு ஏற்றிச் சென்ற லாரி மோதியதில் சுண்ணாம்பு மூட்டைகளுக்கு இடையே நாங்கள் சிக்கிக் கொண்டோம்.
இரு வாகனங்கள்
இதையடுத்து எங்களது அலறல் சப்தம் கேட்டு அங்கிருந்தோர் ஜேசிபி இயந்திரம் மூலம் சுண்ணாம்பு மூட்டைகளை எடுத்து எங்களை மீட்டனர். விபத்து நடந்த இடத்தின் இரு புறத்திலும் விவசாய பயிர்கள் இருந்ததால் எங்கள் அழுகுரல் கேட்டு கிராமத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இரு வாகனங்களும் தலைக்குப்புற கவிழ்ந்தது என்றனர்.
லாரி டிரைவர்கள்
இந்த விபத்தில் ஒரு தம்பதியும் அவர்களது 3 குழந்தைகளும் சிக்கி காயமடைந்துள்ளனர். டெல்லியிலிருந்து சில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வந்ததால் கோவிட் 19 மருத்துவமனை குழுவினர் அவர்களுக்கு கொரோனா சோதனை செய்து அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில் இந்த சம்பவத்தில் இரு லாரிகளின் டிரைவர்களும் உயிருடன் இருக்கின்றனரா என தெரியவில்லை.
சம்பவம்
விபத்தில் தப்பியவர்களிடம் நாங்கள் விசாரணை நடத்தினோம். ஆனால் அவர்களால் நடந்த சம்பவத்தை நினைவுப்படுத்தி கூற முடியவில்லை. இது போல் இனி நடைபெறாமல் பார்த்துக் கொள்கிறோம் என்றனர். விபத்து நடந்த இடத்தில் உணவு பொருட்கள், பைகள் இரைந்து கிடைந்ததை பார்க்கும் போது லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் இந்த லாக்டவுனால் எத்தனை அவதிப்படுகிறார்கள் என்பது தெரிகிறது.