சாதகமாக வந்த தீர்ப்பு.. இனி எல்லாம் அதிரடிதான்.. பல நாள் கனவை நினைவாக்கும் பிரதமர் மோடி!
லக்னோ: அயோத்தி வழக்கில் தீர்ப்பு வந்துள்ளதை அடுத்து பிரதமர் மோடி விரைவில் அயோத்திக்கு செல்வார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகலாம்.
அயோத்தி வழக்கில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இன்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் காலை 10.30 மணிக்கு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் இந்த தீர்ப்பு வாசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்ப்பு காரணமாக நாடு முழுக்க பாதுகாப்பு போடப்பட்டது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
தீர்ப்பு வழங்கினார்கள்
அதன்படி, அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தின் மீது இந்து அமைப்பான ராம ஜென்மபூமி நியாஸ் அமைப்பிற்கு அந்த உரிமை உள்ளது. அங்கு ராமர் கோவில் கட்டலாம், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அயோத்தி வழக்கில் அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கி உள்ளனர்.
மோடி செல்லவில்லை
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வராமல் இருந்த நிலையில் அங்கு பிரதமர் மோடி செல்லாமலே தவிர்த்து வந்தார். தேர்தல் நேரத்தில் மட்டும் சென்றவர், தேர்தலுக்கு பின் அங்கு செல்லவே இல்லை. அயோத்தி வழக்கில் தீர்ப்பு வந்த பின்தான் மோடி அயோத்தி செல்வார் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கண்டிப்பாக செல்கிறார்
இந்த நிலையில் இன்னும் சில வாரங்களில் பிரதமர் மோடி அயோத்தி செல்வார் என்று கூறப்படுகிறது. முதலில் பிரதமர் மோடி தீபாவளியை அயோத்தியில் கொண்டாடுவார் என்று செய்திகள் வந்தது. ஆனால் தற்போது தீபாவளியை காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். அயோத்தி தீர்ப்பு வந்துள்ளதால், விரைவில் மோடி அயோத்தி செல்வார், அங்கு முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என்கிறார்கள்.
மக்கள் முன்னிலையில்
அயோத்தியில் பெரிய விழா போல நடத்தி, அங்கு மக்கள் முன்னிலையில் மோடி பேசுவார், பாஜகவின் சாதனைகளை பட்டியலிடுவார் என்றும் கூறுகிறார்கள். ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் இன்னும் 3 மாதங்களில் தொடங்க வாய்ப்புள்ளது. அதற்கு முன் மோடியின் அயோத்தி பயணம் அதிக கவனம் பெறும் என்று குறிப்பிடுகிறார்கள்.
பல நாள்
பிரதமர் மோடி அயோத்தி சென்றுவிட்டு பின் வாரணாசி செல்ல இருக்கிறார். அங்கு தொகுதி மக்கள் முன்னிலையில் பேசுவார் என்கிறார்கள். பிரதமர் மோடி குஜராத் மாநில அரசியலில் இருந்தே போதே ராமர் கோவில் குறித்து பல மேடைகளில் பேசி, வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அது தற்போது நினைவாகும் சூழல் உருவாகி உள்ளது.