அயோத்தி தீர்ப்பு.. 5 ஏக்கர் மாற்று இடம் வேண்டாம்.. இஸ்லாமிய அமைப்புகள் பரபரப்பு முடிவு!
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்திற்கு பதிலாக வழங்கப்படும் 5 ஏக்கர் மாற்று இடத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று இஸ்லாமிய அமைப்புகள் முடிவு செய்துள்ளது.
லக்னோ: அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்திற்கு பதிலாக வழங்கப்படும் 5 ஏக்கர் மாற்று இடத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று இஸ்லாமிய அமைப்புகள் முடிவு செய்துள்ளது. இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அயோத்தி வழக்கு குறித்து இன்று இஸ்லாமிய அமைப்புகள் இன்று ஆலோசனை நடத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இந்த ஆலோசனை நடந்து உள்ளது. அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் ( All India Muslim Personal Law Board - AIMPLB) தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. பாபர் மசூதி நடவடிக்கை குழு மற்றும் சன்னி வகுப்பு வாரியம் இரண்டும் கலந்து கொண்டது.
இந்த நிலையில் ஆலோசனை கூட்டத்தில் மிக முக்கியமான இரண்டு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அயோத்தி வழக்கிற்கு எதிராக மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் என்று கூறி உள்ளனர்.
அயோத்தி தீர்ப்பு.. உச்ச நீதிமன்றத்தில் இஸ்லாமிய அமைப்புகள் மறுசீராய்வு மனுதாக்கல் செய்ய முடிவு!
இன்னொரு முக்கியமான விஷயம் என்று பார்த்தால், உச்ச நீதிமன்றம் கூறிய ஐந்து ஏக்கர் மாற்று நிலத்தை மறுக்க முடிவு செய்துள்ளனர். எங்களுக்கு மசூதி கட்ட ஐந்து ஏக்கர் நிலம் வேண்டாம். நாங்கள் அதை விரும்பவில்லை. அதை ஏற்கவும் மாட்டோம்.
அதேபோல் இந்த மாற்று இடம் ஷரியத் சட்டத்திற்கு எதிரானது. நாங்கள் நிலத்தை இப்படி வாங்கி அதில் மசூதி கட்ட கூடாது. அதனால் அந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறியுள்ளனர்.
கடந்த வாரம் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானது. அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கி உள்ளனர். இந்த 5 ஏக்கர் நிலத்தைதான் இஸ்லாமிய அமைப்புகள் தற்போது மறுத்துள்ளது.