மீண்டும் வடிவம் மாறும் அயோத்தி ராமர் கோயில்
லக்னோ : அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அஸ்திவாரம் தோண்டும் பணி இன்று முதல் மீண்டும் துவங்கி உள்ளது. இந்த பணி இன்னும் 70 நாட்கள் வரை நடைபெறும் என ராமர் கோயில் டிரஸ்ட் உறுப்பினர்களில் ஒருவரான அனில் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு 2020 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு ராமர் கோயில் கட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டும் பணி துவங்கியது. ஆனால் தூண்கள் அமைக்க ஆய்வு நடத்திய போது மணல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், அப்பணிகள் நிறுத்தப்பட்டன. பிறகு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ராமர் கோயிலை கட்ட முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ராம் ஜென்மபூமி திர்த் ஷேத்ரா டிரஸ்ட் உறுப்பினர்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அனில் மிஸ்ரா, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டும் பணிகள் இன்று முதல் மீண்டும் துவங்கி உள்ளன. இப்பணிகள் அடுத்த 60 முதல் 70 நாட்களுக்கு நடைபெறும். அடித்தளத்திற்கான புதிய வடிவம் எங்களுக்கு கிடைக்கும் வரை இப்பணி நடைபெறும் என்றார்.
டிரஸ்டின் தலைவர் நிர்பேந்திர மிஸ்ரா, டிரஸ்ட்டின் மற்ற உறுப்பினர்களான லார்சன் அன்ட் டூப்ரோ, டாடா கன்சல்டிங் இன்ஜினியர்கள் உள்ளிட்டோருடன் அஸ்திவாரம் தோண்டு பணிகளை பார்வையிட்டார். பிறகு பேசிய அவர், இன்ஜினியர்கள் கோயிலின் புதிய வடிவத்தை அமைத்து வருகின்றனர். புதிய வடிவமைப்பின் படி கோயிலின் அடித்தளம் அமைக்கப்படும். விரைவில் கோயிலின் புதிய வடிவம் உறுதி செய்யப்படும் என்றார்.
ஏற்கனவே அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோயிலின் வடிவங்கள் பலமுறை மாற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரு புதிய வடிவம் தயார் செய்யப்பட உள்ளது.