பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்தனை பேரையும் விடுவித்த கையோடு ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.கே. யாதவ்!
லக்னோ: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து தினமும் பாபர் மசூதி இடிப்பு வழக்கு லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில், 2015ல் இருந்து விசாரணை மேற்கொண்டு வரும் சிறப்பு நீதிபதி எஸ்.கே. யாதவுக்கு உச்ச நீதிமன்றம் பதவிக் காலம் நீட்டிப்பு வழங்கி இருந்தது. இன்று தீர்ப்பு வழங்கிய கையோடு பணி ஓய்வு பெறுகிறார் நீதிபதி சுரேந்திரகுமார் யாதவ்.
இவர் கடந்த 2019ஆம் ஆண்டிலேயே ஓய்வு பெற்று இருக்க வேண்டும். இந்த வழக்கிற்காக பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு இருந்தது.
பாபர் மசூதியை இடிக்க முற்பட்டது சமூக விரோதிகள்.. தீர்ப்பில் தெரிவித்த நீதிபதி
தீர்ப்பு
செப்டம்பர் ஒன்றாம் தேதியுடன் இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ 351 சாட்சிகளிடம் விசாரணையை நடத்தி முடித்து இருந்தது. மேலும் 600 பேரிடம் இந்த விசாரணை முடிக்கப்பட்டு இருந்தது. இந்த விசாரணைகள் முடிந்த மறுநாளே நீதிபதி எஸ்.கே. யாதவ் தீர்ப்பு எழுத துவங்கிவிட்டார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இந்த தீர்ப்பை இன்று வழங்கியுள்ளார்.
கால அவகாசம்
தினமும் விசாரணை மேற்கொண்டு இரண்டு ஆண்டுகளில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று 2017ல் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதையடுத்தும் மேலும் அவகாசம் வேண்டும் என்று நீதிபதி கேட்டு இருந்ததால் வழங்கபட்டு இருந்தது. இதையடுத்து இறுதியாக செப்டம்பர் 30ஆம் தேதி தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிபதி எஸ்.கே. யாதவ் தினமும் விசாரணை மேற்கொண்டு வந்தார்.
சமூக விரோதிகள்
இந்த வழக்கில் முன்பே எதிர்பார்க்கப்பட்டது போல், மசூதியை இடிப்பதற்கு முன்பே திட்டமிட்டு இருந்தனரா என்ற விவகாரத்துக்குத்தான் நீதிபதி எஸ்.கே. யாதவ் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். திட்டமிடவில்லை என்றும், சமூக விரோதிகள்தான் இடித்தனர் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
கேள்விகள்
இந்த வழக்கில் கடந்த நான்கரை ஆண்டுகளில் பாஜக மூத்த தலைவர் அத்வானியிடம் மட்டும் 100 கேள்விகளை நீதிபதி கேட்டு இருந்தார். அனைத்து கேள்விகளுக்கும் தனக்கு பதில் தெரியாது என்று அத்வானி கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.