பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு இன்று... அத்வானி குற்றவாளி எனில் 5 ஆண்டு சிறை தண்டனையாம்!
லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முன்னாள் துணை பிரதமரும் பாஜகவின் மூத்த தலைவருமான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்கின்றனர் வழக்கறிஞர்கள்.
1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான கிரிமினல் வழக்கில் லக்னோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திரகுமார் யாதவ் இன்று தீர்ப்பளிக்கிறார். 28 ஆண்டுகாலமாக நடைபெற்று வரும் வழக்கில் இன்று லக்னோ சிறப்பு நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனையொட்டி லக்னோ நீதிமன்ற வளாகத்தில் 2,000க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
1949-ல் ராமர் சிலை வைக்கப்பட்டது முதல் 1992 டிச.6ல் அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு வரை!
குற்றவாளி எனில் அத்வானிக்கு 5 ஆண்டு ஜெயில்
இன்றைய தீர்ப்பில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, வினய் கட்டியார், சாத்வி உள்ளிட்டோர் குற்றவாளிகள் எனில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்கின்றனர் வழக்கறிஞர்கள்.
கல்யாண்சிங்குக்கு 3 ஆண்டு சிறை?
இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் ஆளுநரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான கல்யாண்சிங், சாக்சி மகாராஜ், அயோத்தி மாவட்ட மாஜிஸ்திரேட் ஶ்ரீவஸ்தவா ஆகியோர் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு வாய்ப்பு உள்ளதாம்.
பாஜக எம்.பிக்களுக்கு ஆயுள் கிடைக்குமாம்
குற்றவியல் நடைமுறை சட்டம் 395-ன் கீழ் குற்றம்சாட்டப்பட்ட பாஜக எம்பிக்கள் பிரிஜ் பூஷன் சரண்சிங், லல்லு சிங் உள்ளிட்ட 17 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டால் ஆயுள் தண்டனை கிடைக்கும் என்கின்றன நீதித்துறை வட்டாரங்கள். பிரிஜ் பூஷன் சரண்சிங், லல்லு சிங் ஆகியோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால் அவர்களது எம்.பி. பதவிகள் பறிபோகும்.
வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகின்றனர்
மேலும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டால் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் அவர்களுக்கு அவகாசம் வழங்கப்படும். கொரோனா பாதிப்பு காலம் என்பதால் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, கல்யாண்சிங் உள்ளிட்ட பலர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்றைய விசாரணையில் ஆஜராக உள்ளனர்.