ஹத்ராஸ் பெற்றோருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு தர முடியுமா? எங்க கூட கூட்டிகிட்டு போகவா? பீம் ஆர்மி
ஹத்ராஸ் (உபி): உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட தலித் பெண்ணின் பெற்றோருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் வலியுறுத்தியுள்ளார்.
ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை அரசியல் தலைவர் சந்தித்து பேசுவதை உத்தரப்பிரதேச போலீஸ் தொடர்ந்து தடுத்து வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் எம்பி டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட பலரை முரட்டுத்தனமாக கீழே தள்ளிவிட்டது உபி போலீஸ்.
இந்த தடையை உடைத்து ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் ஹத்ராஸ் சென்று தலித் பெண்ணின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இதேவரிசையில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர ஆசாத் இன்று ஹத்ராஸ் சென்று தலித் பெண்ணின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பிரியங்கா காந்தியின் குர்தாவை தொட யார் தைரியம் தந்தது..? உ.பி. போலீஸை விளாசும் பாஜக பெண் தலைவர்..!
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர் ஆசாத், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு தரப்பட வேண்டும்; இல்லையெனில் இந்த பெற்றோரை நாங்களே அழைத்து செல்ல நேரிடும். இந்த பிரச்சனை குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
முன்னதாக சந்திரசேகர் ஆசாத்தையும் ஹத்ராஸ் செல்லவிடாமல் போலீசார் தடுத்திருந்தனர். இந்த தடையை உடைத்துதான் சந்திரசேகர் ஆசாத்தும் ஹர்த்தாஸ் சென்று ஆறுதல் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.