குடியுரிமை சட்ட போராட்டம்- போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் மாணவர் உயிரிழந்ததாக உ.பி. போலீஸ் ஒப்புதல்
லக்னோ: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக உத்தரப்பிரதேச போலீசார் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களில் உத்தரப்பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முகமது சுலைமான் (வயது 20), அனாஸ் (வயது 21) ஆகிய 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி உ.பி. போலீசார் இதுவரை அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை.
தற்போது, மொகித் குமார் என்ற போலீஸ்காரர் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பிஜ்னோர் மாவட்ட எஸ்.பி. சஞ்சீவ் தியாகி கூறியுள்ளார். இது குறித்து சஞ்சீவ் தியாகி கூறியதாவது:
பிஜ்னோர் மாவட்டத்தில் கடந்த 20-ந் தேதி குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் போது மொகித் குமார் என்ற போலீஸ்காரர் மீது நாட்டு துப்பாக்கியால் சிலர் சுட்டனர்.
இதில் படுகாயமடைந்த மொகித் குமார், தற்காப்புக்காக பதில் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் முகமது சுலைமான் என்ற இளைஞர் உயிரிழந்தார். தற்போது மொகித் குமார் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மொகித் குமாரின் வயிற்றில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது. இவ்வாறு சஞ்சீவ் தியாகி தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் பலியான முகமது சுலைமான், நொய்டாவில் கல்லூரி இறுதி ஆண்டு படித்து வந்த மாணவர். யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகி வந்த அந்த மாணவர், காய்ச்சல் காரணமாக சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சுலைமான் குடும்பத்தினர், வெள்ளிக்கிழமை தொழுகைக்கு சென்று திரும்பிய சுலைமானை போலீசார் அழைத்துச் சென்று மதராசா அருகே சுட்டுக் கொன்றனர் என குற்றம்சாட்டியுள்ளனர்.
பிஜ்னோர் மாவட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியான மற்றொரு இளைஞர் அனாஸ். குழந்தைக்கு பால் வாங்க சென்ற போது போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் அனாஸ் உயிரிழந்தார்.