மரத்துப்போன மனிதம்... மிருகங்களை விட மோசமாக நடத்தப்படும் மனிதர்கள்... ஆக்ராவில் வெடித்த சர்ச்சை
லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் மிருகங்களை விட மிக மோசமாக நடத்தப்பட்ட விதத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
Recommended Video
ஆக்ராவில் கோரண்டைன் மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கானோருக்கு மிருகக்காட்சி சாலையில் உணவு வைக்கப்படுவதை போல் இரும்பு கேட்டிற்கு முன் பிஸ்கட்கள் தூக்கிவீசப்படும் காட்சி காண்போரை கொதிப்படைய செய்கிறது.
கொரோனா நோயாளிகளை சக மனிதர்கள் அணுகுவது குறித்து மத்திய மாநில அரசுகள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாததே இது போன்ற சமூக ஒதுக்கல் நிகழ்வுகளுக்கு வழி வகுக்கிறது.
லாக்டவுனை நீக்கிவிட்டு தொழில் நடவடிக்கைகளை தொடங்க வேண்டும்:மோடியிடம் முதல்வர்கள் வலியுறுத்தல்
கோரண்டைன் மையம்
உத்திரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தனிமைப்படுத்தல் மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு நூற்றுக்கணக்கானோர் தங்க வைக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு உணவு அளிக்கப்படும் காட்சி தான் தேசிய அளவில் வைரலாகி உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சர்ச்சையில் சிக்கவைத்துள்ளது.
தூக்கி வீசுதல்
ஆக்ராவில் கோரண்டைன் மையம் ஒன்றில், மிருகக்காட்சி சாலைகளில் மிருகங்களுக்கு உணவு வைக்கப்படுவதை போல் இரும்பு கேட்டின் முன்பு தண்ணீர்பாட்டில்கள், பிஸ்கட் பாக்கெட்கள் தூக்கி வீசப்படுகின்றன. அதனை எடுப்பதற்காக ஒன்றாக கூடி நின்று ஒருவருக்கு ஒருவர் போட்டி போடுகின்றனர். இதேபோல் அவர்களுக்கு வழங்கப்படும் தேநீர் உள்ளிட்ட பானங்களும் இரும்பு கேட்டின் வெளியே ஒரு கட்டில் போடப்பட்டு அதில் வைக்கப்படுகிறது.
தவறான அணுகுமுறை
நாடு தழுவிய அளவில் கொரோனா நோயாளிகளை அணுகும் விவகாரத்தில் மக்கள் மத்தியில் அரசு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாதன் விளைவே இது போன்ற கொடூர நிகழ்வுக்கு சான்றாகும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய எதிர்ப்பது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு பூரண நலம்பெற்ற பின்னரும் அவர்களை ஒதுக்கி வைப்பது போன்ற அவலங்கள் தொடர்கதையாகி வருகின்றன.
கனிவான வார்த்தை
இதனிடையே மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும், செவிலியர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவதை அறிய முடிகிறது. கொரோனா நோயாளிகளிடம் கனிவான வார்த்தைகளால் நம்பிக்கை அளிப்பதுடன், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய ஆகாரங்கள் அளிக்கப்படுகின்றன.