உ.பி,யில் 5-ம் கட்ட வாக்குப் பதிவை எதிர்கொள்ளும் 12 தொகுதிகளில் 7-ல் பாஜகவுக்கு அக்னி பரீட்சை
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வரும் திங்களன்று 5-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 12 தொகுதிகளில் 7-ல் பாரதிய ஜனதா கட்சி பெரும் பின்னடைவை சந்திக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
2014 லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதால் மத்தியில் பாஜக அமைத்தது. ஆனால் இந்த முறை பாஜகவுக்கு உத்தரப்பிரதேசத்தில் பலத்த அடிதான் விழும் என்பதை பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி கூட்டணி வெளிப்படுத்தி வருகிறது.
பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணியால் பாஜகவின் வாக்கு வங்கியில் ஏற்படும் சிறு சரிவும் கூட அக்கட்சியின் வெற்றியை பல தொகுதிகளில் குழிதோண்டி புதைக்கும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து. உத்தரப்பிரதேசத்தில் வரும் திங்கள்கிழமையன்று 12 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
மே.வங்கம்: மமதா அள்ளப் போகும் முஸ்லீம் வாக்குகள்.. இந்துக்களை வளைத்த பாஜக.. பரிதாப காங், கம்யூ.!
இதில் ராகுல்காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியும் அடங்கும். இத்தொகுதியில் 2014-ம் ஆண்டு பாஜக வேட்பாளராக ஸ்மிருதி இரானியை 1,07,903 வாக்குகளில் ராகுல் காந்தி தோற்கடித்தார். இம்முறையும் ஸ்மிருதி இரானி களம் காண்கிறார். அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் சரிவை சந்தித்தது. இதனால் இம்முறை அமேதி தொகுதியில் கடும் போட்டி இருக்கும் என்றே கூறப்படுகிறது.
5-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் 2014-ம் ஆண்டு பதிவான வாக்குகளை ஒப்பிடுகையில் தற்போது பகுஜன்- சமாஜ்வாதி கூட்டணி நிச்சயம் 7 தொகுதிகளில் பாஜகவை வீழ்த்திவிடும் என்று கணிக்கப்படுகிறது. இத்தொகுதிகளில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி வெற்றி பெற வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.