போயாச்சு 370.. இனி அழகான காஷ்மீரி பெண்களை திருமணம் செய்யலாம்.. பாஜக எம்எல்ஏ பேச்சு
லக்னோ: ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளதால் இனி அழகான காஷ்மீரி பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என உத்தரப் பிரதேச பாஜக எம்.எல்.ஏ விக்ரம் சைனி பேசியுள்ளது சமுக வலைதளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு நீக்கி கடந்த திங்கள்கிழமை அறிவித்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு தனி யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான நாடாளுமன்றத்தில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இதுவரை ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கில் இருந்த பல சிறப்பு சலுகைகள் ரத்து செய்யப்பட்டுளளன. ஜம்மு காஷ்மீர் பெண்கள் வெளிமாநில ஆண்களை முன்பு திருமணம் செய்தால் ஜம்மு காஷ்மீரில் உள்ள சொத்துரிமை போய்விடும். அவர்களால் அங்கு சொத்து வாங்க முடியாது. இனி அப்படி இருக்காது. இதேபோல் இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் இனி காஷ்மீரில் சொத்து வாங்க முடியும். மற்ற மாநிலங்களைப்போல் ஒரு பகுதியாக மாறியுள்ளது. அங்கும் ஒரே சட்டம் தான் இனி.
இதனால் பாஜக தலைவர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். அப்படித்தான் உத்தரப் பிரதேசத்தின் முஸாபர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ விக்ரம் சைனி கட்சி தொண்டர்களிடம் காஷ்மீர் குறித்து மகிழ்ச்சியுடன் சில விஷயங்களை பேசியுள்ளார்.
அப்போது, அவர் பேசும் போது 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளதால் தற்போது அழகான காஷ்மீரி பெண்களை திருமணம் செய்து கொள்ள முடியும். பாஜகவில் உள்ள இளைஞர்கள் காஷ்மீருக்கு சென்று திருமணம் செய்து கொள்ளலாம், நிலம் வாங்கலாம் என்றார்.
பாஜக எம்.எல்.ஏ பேசிய வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பேச்சு சர்ச்சையாகி விமர்னங்கள் எழுந்து வரும் நிலையில், பாஜக எம்எல்ஏ விக்ரம் சைனி, சர்ச்சைக்குரிய வகையில் தான் எதுவும் பேசவில்லை என தெரிவித்துள்ளார்.