எல்லோரும் எனக்கே ஓட்டுப் போடுங்க.. இல்லாட்டி பாவம் வந்துரும்ய்யா.. பாஜக எம்.பி சாபம்!
லக்னோ: எனக்கு வாக்களிக்காவிடில் உங்கள் அனைவருக்கும் பாவம் வந்து சேரும் என்று உத்திரப்பிரதேச மாநில உன்னவ் தொகுதி எம்.பி.யும் சாமியாருமான சாக்ஷி மகராஜ் கூறியுள்ளார்.
சாக்ஷி மகராஜ் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். வாயைத் திறந்தாலே சர்ச்சையாகத்தான் பேசுவது இவரது ஸ்டைல். சமீபத்தில் பாஜகவின் திட்டத்தை பொது வெளியில் போட்டு உடைத்தார். அதாவது இம்முறை மோடி மீண்டும் பிரதமர் ஆனால் இனி இந்தியாவில் தேர்தலே நடைபெறாது என்று கூறியிருந்தார். இதையேதான் அரவிந்த் கேஜ்ரிவால் போன்ற தலைவர்களும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இனி இந்தியாவில் தேர்தல் நடைபெறாது என்ற அச்சத்தை வெளிப்படுத்தியிருந்தனர் இது மட்டும் அல்லாமல் நாட்டில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு காரணமே இஸ்லாமியர்கள் தான் என்று தனது உலக மகா கண்டுபிடிப்பை வெளியிட்டு பொதுமக்களிடம் இருந்து வாங்கி கட்டிக் கொண்டார்.
சீட் கிடைக்காததால் அதிருப்தி.. தனிக் கட்சி தொடங்குகிறாரா மதுரை கோபாலகிருஷ்ணன்?
இப்படி உளறல்களின் மன்னனாக திகழும் சாக்ஷி சமீபத்தில் உத்திரப்பிரதேச மாநிலம் உன்னவ் மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தனக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர் சாஸ்திரங்கள் சந்நியாசி கேட்பதை கொடுக்கவேண்டும் என்று கூறுகிறது. அவ்வாறு சந்நியாசி கேட்டும் மக்கள் கொடுக்கவில்லை என்றால் யார் கொடுக்கவில்லையோ அவர்களின் நற்செயல்களினால் விளைந்த பலன்களை, சந்நியாசி எடுத்துக் கொண்டு பாவங்களை திருப்பித் தருவார் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது என்று பிரச்சாரம் செய்தார். அதோடு நீங்கள் எனக்கு வாக்களித்து வெற்றி பெற வைப்பீர்கள் என்று நம்புகிறேன். இல்லாவிடில் நான் கோயில்களில் பூஜை செய்ய சென்று விடுவேன். அப்போது எனக்கு வாக்களிக்காத உங்களுக்கு நான் சாபம் விடுவேன். அதன் பிறகு நீங்கள் மகிழ்ச்சியாகவே இருக்க முடியாது என்று சபித்துள்ளார் இந்த சாக்ஷி மகராஜ் என்னும் சாமியார்.
ஹரியானா மாநிலத்தில் இரு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் போலி சாமியாரும் கொடுங்குற்றவாளியுமான குர்மீத் ராமுக்கு ஆதரவாக பேசியவர்தான் இந்த சாக்ஷி மகராஜ். சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் போலி சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு ஆதரவாக பேசிய இந்த சாமியார் கோடிக்கணக்கான மக்கள் அவர் பக்கம் நிற்கிறார்களா அல்லது அந்தப் பெண்கள் பக்கம் நிற்கிறார்களா என்றெல்லாம் கேள்வி எழுப்பி அவரை சிறையில் இருந்து வெளியில் விட வேண்டும் என்றெல்லாம் பேசியிருந்தார்.
ஆன்மீக ரீதியாக மக்களை பயமுறுத்தி மூட நம்பிக்கைகளை தனக்கு சாதகமாக்கி மக்களை அச்சுறுத்தி வாக்கு சேகரிக்கும் ஒரு வேட்பாளர் தேர்தல் விதிமுறைகளை காற்றில் பறக்க விடுவதோடு சட்டத்திற்குப் புறம்பாகவும் மக்களை அச்சுறுத்தி வருகிறார். ஒரு சவுகிதார் பிரதமராகவும், மற்றொரு சவுகிதார் முதல்வராகவும் உள்ள மாநிலத்தில் சவுகிதாராக இருந்துகொண்டே ஒரு மக்களவை உறுப்பினர் இப்படி அப்பட்டமாக மக்களை மிரட்டுகிறார் என்பது மக்கள் மனதில் மிகுந்த வேதனையை கொடுத்துள்ளது.
இந்த நாட்டுக்கே தங்களை பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளும் பாஜகவினர் இந்த உளறல்களுக்கு என்ன பதில் கூறப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் இதுவரை பாஜக அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது. அதோடு தேர்தல் ஆணையம் இதில் தலையிடுமா அல்லது இந்த மிரட்டல் சம்பவம் துபாய் பக்கம் தூத்துக்குடி பக்கம் நிகழ்ந்தது என்று கண்டுகொள்ளாமல் இருக்குமா என்பது போக போகத் தெரியும்