தடியடி விவகாரம்.. உ.பி. யோகி அரசின் காட்டுமிராண்டித்தனம்.. விமர்சனம் செய்த பாஜக எம்பி வருண்காந்தி
லக்னோ: ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி ஊர்வலமாக சென்றவர்கள் மீது தடியடி நடத்தியதற்காக உத்தரப்பிரதேச மாநில பாஜக அரசை அதே கட்சியை சேர்ந்த பாஜகவின் எம்பி வருண் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் அரசுப் பள்ளிகளில் உதவி ஆசிரியர்கள் காலியிடம் நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்து நேற்று முன் தினம் (சனிக்கிழமை) 69 ஆயிரம் மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி முதல்வர் யோகி ஆதித்யநாத் இல்லத்தை ஊர்வலமாகச் நோக்கிச் சென்றனர்.
அப்போது அவர்கள் மீது கடுமையான தடியடி நடத்தியுள்ளனர். இதில் ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ் யாதவ், மாயாவதி உள்ளிட்டோர் கண்டித்தனர். இந்த தடியடி நடத்திய வீடியோவை தனது ட்விட்டரில் பாஜக வருண்காந்தி எம்பி பகிர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் வருண் காந்தி அவர் கூறுகையில் இவர்களும் பாரத் மாதாவின் குழந்தைகள்தான். அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதைப் பற்றிய மறதி உங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அக்கோரிக்கைகளை கேட்க கூட யாரும் தயாராக இல்லை.
ஆனால் காட்டுமிராண்டித்தனமான லத்தி சார்ஜை மட்டும் அவர்கள் எதிர்கொள்ள வைக்கப்படுகிறார்கள். அவர்கள் உங்கள் குழந்தைகளாக இருந்திருந்தால் அவர்கள் இதே போன்ற நடவடிக்கையை எதிர் கொண்டிருப்பார்களா? ஆசிரியர் பணிக்கு நிறைய காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் அதற்கு தேவையான தகுதியான படித்த விண்ணப்பதாரர்களும் இருக்கின்றனரே, பிறகு ஏன் நீங்கள் காலியிடங்களை நிரப்பவில்லை? என வருண் காந்தி தெரிவித்துள்ளார்.
இதற்கு பாஜகவினர் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. பாஜகவின் எம்பியாக இருந்து கொண்டு வருண்காந்தி அக்கட்சியின் ஆட்சியையே விமர்சித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருண் காந்தி செய்வது இது முதல்முறையல்ல. கடந்த மாதம் 3 வேளாண் சட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோடி வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.
இதையடுத்து பிலிப்பிட் தொகுதியின் எம்பி வருண்காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு 4 கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தார். அதில் கடந்த ஓராண்டாக விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு எதிராக உள்ள வழக்குகளை திரும்ப பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தார்.
ये बच्चे भी मां भारती के लाल हैं, इनकी बात मानना तो दूर, कोई सुनने को तैयार नहीं है। इस पर भी इनके ऊपर ये बर्बर लाठीचार्ज।
— Varun Gandhi (@varungandhi80) December 5, 2021
अपने दिल पर हाथ रखकर सोचिए क्या ये आपके बच्चे होते तो इनके साथ यही व्यवहार होता??
आपके पास रिक्तियां भी हैं और योग्य अभ्यर्थी भी, तो भर्तियां क्यों नहीं?? pic.twitter.com/6F67ZDJgzW
அது போல் லக்கீம்பூர் கேரியில் விவசாயிகளின் போராட்டத்தில் காரை ஏற்றியதாக குற்றம்சாட்டப்பட்ட மத்திய அமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகனையும் வருண்காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் பாஜக மூத்த தலைவர்களின் தூண்டிவிடும் அளவிலான பேச்சுகள் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் நமது ஜனநாயகத்திற்கு களங்கம் விளைவிக்கிறது. மத்திய அமைச்சர் மீது நடவடிக்கை எடுங்கள் என வருண் காந்தி பேசியிருந்தார்.