நல்லா தெரிஞ்சுக்குங்க.. உ.பியில் ஒரு தொகுதியிலும் பாஜக ஜெயிக்காது.. அடித்துச் சொல்லும் லாலு மகன்
லக்னோ: லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் ஒரு தொகுதியில் கூட பாஜகவால் வெல்ல முடியாது என்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அதிக லோக்சபா தொகுதிகள் கொண்ட மாநிலம்... மத்தியில் யாருக்கு ஆட்சி அதிகாரம் யாருக்கு கிடைக்கப்போகிறது என்ற விஷயத்தில் மிக முக்கிய பங்கினை அளிக்கும் மாநிலம் உத்தரப்பிரதேசம். பல ஆண்டுகளாக அந்த மாநிலத்தில் அதிக லோக்சபா தொகுதிகளை வெல்லும் கட்சி அல்லது வெல்லும் நபர்களே மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெறுகின்றனர்.
அந்த வகையில் உத்தரப்பிரதேச அரசியல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந் நிலையில் புதிய அரசியல் திருப்பமாக.. அம்மாநிலத்தில் மாயாவதியும், அகிலேஷ் யாதவ்வும் கூட்டணி அமைத்து காங்கிரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். இரண்டே இரண்டு தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்குவதாக இருவரும் அறிவித்தனர்.
மாயாவதி, அகிலேஷ் கூட்டணி
மாயாவதி, அகிலேஷின் இந்த புதிய பாணி அரசியலால் காங்கிரஸ் மேலிடம் அதிர்ந்தது. இருப்பினும் ராகுல் காந்தி கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்தார். நிலைமைகள் மாறும்... இது இறுதியானது அல்ல என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் ஆரூடம் சொன்னார். ஆனால்... உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என்ற அறிவிப்பு வெளியானது.
மாயாவதியுடன் சந்திப்பு
இந் நிலையில், பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ், மாயாவதியை சந்தித்தார். கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றும் வாழ்த்தும் தெரிவித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
மக்கள் வரவேற்கும் கூட்டணி
உத்தரப்பிரதேசத்தில் அமைந்திருக்கும் அகிலேஷ் யாதவ், மாயாவதி கூட்டணியை மக்கள் அமோக வரவேற்றுள்ளனர். மாநில கட்சிகள் ஒன்றிணைந்தால் தான் பாஜகவை வீழ்த்த முடியும்.
பாஜகவுக்கு வெற்றி கிடைக்காது
மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது. பீகாரிலும் முற்றிலுமாக பாஜகவை மக்கள் புறக்கணித்து விடுவார்கள். அகிலேஷ், மாயாவதி கூட்டணி உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வெல்லும். உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டுமல்லாமல்.. பீகார் மாநிலத்திலும் பாஜக வெற்றி பெறாது என்று கூறினார்.