உ.பி.யில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங். கூட்டணி அமைத்தால் 95 % வாக்குகள் உறுதி.. இந்தியா டுடே சர்வே
Recommended Video
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்தால் பாஜக நிச்சயம் மண்ணை கவ்வும் என இந்தியா டுடே கருத்து கணிப்புகளில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் மே மாதம் நடைபெறவுள்ளது. மத்தியில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸும், ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜகவும் கடும் போராட்டம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவுள்ளன.
எனினும் காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட்டுவிட்டன. இதனால் காங்கிரஸ் கட்சியும் 80 தொகுதிகளில் தனித்து போட்டி என அறிவித்துள்ளது. இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் இந்தியா டுடே மற்றும் கார்வி இன்சைட்ஸ் மக்களின் மனநிலை என்ற கருத்து கணிப்பை நடத்தின.
சர்வே முடிவுகள்
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 2,478 பேரிடம் நடந்த மிகப் பெரிய இந்த சர்வே நாடு முழுவதும் மக்களின் நாடிதுடிப்பை அறிந்து வருகிறது. அவர்களிடம் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் இதர கட்சிகள் இணைந்து பாஜகவுக்கு எதிராக தேர்தலை சந்தித்தால் என்னவாகும் என கேட்கப்பட்டது. இந்த சர்வேயின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
எத்தனை இடங்கள்
அதில் கடந்த 2014-ஆம் ஆண்டு பாஜகவும் அப்னா தளமும் இணைந்து போட்டியிட்டதில் 73 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இவற்றின் வாக்கு சதவீதம் 43.3% ஆகும். அது போல் காங்கிரஸ் கூட்டணி 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
கணிப்பு
ஆனால் தற்போதைய கணிப்பில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அதில் பாஜகவும் அப்னா தளமும் இணைந்து போட்டியிட்டால் வெறும் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்று தெரிகிறது. இதன் வாக்கு சதவீதமும் 36 ஆக இருக்கும். அது போல் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரீய லோக் தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தால் நிச்சயம் 75 இடங்களில் வெற்றி கிடைக்கும் என கணிப்பு கூறுகிறது.
கூட்டணி அமைக்க வாய்ப்பு
இவற்றின் வாக்கு சதவீதம் 50.3 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாக உயரும் என்று கூறப்படுகிறது. என்னதான் சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜ் கட்சியும் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியை தனித்து விட்டாலும் தேர்தலுக்கு பிறகோ அல்லது தேர்தல் நேரத்திலோ கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.