நாங்கள் இந்தியரா இல்லையா என்பதை பாஜக தீர்மானிக்க முடியாது: என்.பி.ஆருக்கு எதிராக அகிலேஷ் ஆவேசம்
லக்னோ: நாங்கள் இந்தியரா இல்லையா என்பதை பாரதிய ஜனதா கட்சி தீர்மானிக்க முடியாது என சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
லக்னோவில் மாணவர் சங்க தலைவர்களிடையே இன்று அகிலேஷ் யாதவ் பேசியதாவது:
நாங்கள் இந்தியரா இல்லையா என்பதை பாஜக தீர்மானிக்க முடியாது. நாங்கள் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டை (என்.பி.ஆர்.) வேண்டாம் என்கிறோம்.
எங்களுக்கு தேவை வாழ்வாதாரமும் வேலைவாய்ப்பும்தான். நாட்டின் பொருளாதாரம் ஐ.சி.யூவில் இருப்பதாக வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
என்.பி.ஆர் விண்ணப்பங்களை நாங்கள்தான் முதலில் பூர்த்தி செய்யாமல் இருப்போம். நான் எந்த ஒரு விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்யமாட்டேன். இனி நீங்களே என்.பி.ஆர். குறித்து முடிவு செய்யுங்கள்.
குடியுரிமை சட்ட திருத்தத்தின் போது போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலர் பலியாகினர். முதல்வர் ஆதித்யநாத்தின் பேச்சுகள்தான் இத்தனை மரணங்களுக்கு காரணம். தற்போது யோகி ஆதித்யநாத்தைப் போலவே மாநில அரசு அதிகாரிகளும் பேசுகின்றனர்.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவு- பகுஜன் சமாஜ் ம.பி. எம்.எல்.ஏ. சஸ்பெண்ட் - மாயாவதி அதிரடி
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களின் போது அதிகாரிகள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதற்கான சிசிடிவி காட்சிகள் இருக்கின்றன. நாங்கள் ஆட்சி அமைக்கும் போது விசாரணை நடத்தி இந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்போம்.
உயர்நீதிமன்ற அல்லது உச்சநீதிமன்றத்தின் பணியில் உள்ள நீதிபதியைக் கொண்டு குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறினார்.