குமாரசாமி அரசு கவிழ்ப்பு- ஜனநாயகத்தின் கறுப்பு அத்தியாயம்: மாயாவதி கொந்தளிப்பு
லக்னோ: கர்நாடகாவில் ஜேடிஎஸ்-காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்ட நிகழ்வானது ஜனநாயகத்தின் வரலாற்றில் ஒரு கறுப்பு அத்தியாயம் என விமர்சித்துள்ளார் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி.
கர்நாடகாவில் குமாரசாமி அரசை பாஜக கவிழ்த்துள்ளது. இதையடுத்து முதல்வர் பதவியை குமாரசாமி ராஜினாமா செய்துள்ளார். குமாரசாமி அரசை ஆதரிக்காத பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ. மகேஷை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார் மாயாவதி.
இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள மாயாவதி, அனைத்து அரசியல் சாசன அமைப்புகளையும் துச்சமாக மதிக்கிறது பாஜக. பணம் மற்றும் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு கர்நாடகாவில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் ஆட்சியை கவிழ்த்துள்ளனர்.
இது ஜனநாயக வரலாற்றில் ஒரு கறுப்பு அத்தியாயம்... . இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார். முன்னதாக தமது கட்சி எம்.எல்.ஏ. மகேஷை டிஸ்மிஸ் செய்து ட்விட்டரில் பதிவிட்ட மாயாவதி, வாக்கெடுப்பில் பங்கேற்காததை கட்சி ஏற்கவில்லை. அவர் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார் என குறிப்பிட்டிருந்தார்.
கர்நாடகாவில் நிகழ்த்தப்பட்டது ஜனநாயகப் படுகொலை என அரசியல் பார்வையாளர்கள் பலரும் கூறுகின்றனர். ஆனால் பெரும்பாலான அரசியல் கட்சிகள் கனத்த மவுனம் காக்கின்றன.