அந்த விவாதம் ஆபத்தானது .. அந்த மனநிலையை ஆர்எஸ்எஸ் கைவிட வேண்டும்.. மாயாவதி வேண்டுகோள்
லக்னோ: சமூகத்தில் ஒடுக்கப்பட்டோருக்கு அரசியல் அமைப்பு சட்டம் இடஒதுக்கீடு வழங்கியுள்ளது எனவே இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனநிலையை ஆர்எஸ்எஸ் கைவிட வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், இடஒதுக்கீட்டை ஆதரிப்போர், எதிர்ப்போர் என இரண்டு தரப்புமே திறந்த மனதுடன் விவாதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி டுவிட்டரில் வேண்டுகோள் ஒன்றை ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்துக்கு வைத்துள்ளார்.
அதில், "எஸ்சி,எஸ்டி, மற்றும் ஒபிசி பிரிவினருக்கு அளித்துள்ள இடஒதுக்கீடு குறித்து இணக்கமான ஒரு சூழலில் ஆதரிப்போரும், எதிர்ப்போரும் திறந்த மனதுடன் விவாதம் நடத்தலாம் என்ற ஆர்எஸ்எஸ் தலைவர் கூறியுள்ளார். இதுபோன்ற விவாதம் ஆபத்தான சூழ்நிலைக்கு வழிவகுக்கும். இந்த விவாதம் தேவையில்லாதது. மனித நேயத்துடன் அரசியல் அமைப்பு இடஒதுக்கீட்டை வழங்கி உள்ளது.
அதில் இடையூறு செய்வது என்பது முறையில்லாதது. எனவே இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனநிலையை ஆர்எஸ்எஸ் அமைப்பு கைவிடுவது தான் சிறந்தது" இவ்வாறு கூறியுள்ளார்.