குடியுரிமை சட்ட போராட்டம்: உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு- உ.பி.யில் மட்டும் 6 பேர் பலி!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களின் போது நிகழ்ந்த வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள் வன்முறையாக வெடித்துள்ளன.. டெல்லி, மங்களூர், லக்னோ என பல இடங்களில் வன்முறைகள் வெடித்துள்ளன.
மங்களூருவில் நேற்று போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர். லக்னோவில் இப்போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறையில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் இன்றும் டெல்லி, உத்தரப்பிரதேசம், குஜராத், தமிழகம் என பல மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. டெல்லியிலும் லக்னோவிலும் போராட்டங்களின் போது வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது போராட்டங்களின் போது பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது என போலீசார் கூறியதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
மொத்தம் 9 பேர் பலி
உ.பியின் பிஜ்னோரில் 2 பேர், சம்பால், பைரோசாபாத், மீரட், கான்பூரில் தலா ஒருவர் மொத்தம் 6 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 2 நாட்களில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.