இதை விட கொடுமை என்னங்க வேணும்.. இந்தியாவின் மிக பெரிய தொகுதி வாக்காளர்களுக்கு விடப்பட்ட சவால்!
உன்னாவோ தொகுதியில் போட்டியிடுபவர்கள் கிரிமினல் பின்னணியில் உள்ளனர்.
லக்னோ: மாற்றம் வேண்டும். இதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்காது. ஆனால் இது மோசம் என்று அதற்கு போனால் அது அதை விட மோசம் என்று இருந்தால் எப்படி அதை மாற்றம் என்று கூற முடியும். தலை சுத்துதா.. கொஞ்சம் ஊன்றிப் படியுங்கள்.. உங்களுக்கே புரியும்.
ஒரு தொகுதியில் உள்ள வேட்பாளர்களில் யாரைத் தேர்வு செய்து வாக்களிக்கலாம் என்று பார்த்தால் யாரையுமே தேர்வு செய்ய முடியாத அளவுக்கு அத்தனை பேரும் கிரிமினல் பின்னணி கொண்ட வேட்பாளர்களாக இருந்தால் என்ன தான் செய்வது. அப்படி ஒரு கொடுமையை உ.பி. மாநில மக்கள் சந்தித்துள்ளனர்.
அந்தத் தொகுதியின் பெயர் உன்னாவோ. உ.பியில் உள்ள ஒரு தொகுதி. இந்தத் தொகுதி இன்று தேர்தலை சந்தித்தது. இந்தத் தொகுதியின் விசேஷம் என்ன தெரியுமா.. இதுதான் இந்தியாவிலேயே மிகப் பெரிய லோக்சபா தொகுதி. இந்தத் தொகுதி மக்களுக்கு விடப்பட்ட சவால்தான் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
கல்லோ மண்ணோ எதை கலந்து ரசகுல்லா கொடுத்தாலும் அது எனக்கு மகா பிரசாதம்.. மம்தாவுக்கு மோடி கவுன்ட்டர்!
சர்ச்சை சாமியார்
உன்னாவோ தொகுதியின் முக்கிய வேட்பாளர்கள் பாஜகவின் சாக்ஷி மகராஜ் (இவர் ஒரு சர்ச்சை சாமியார்), காங்கிரஸ் சார்பில் அனு டாண்டன், சமாஜ்வாடி கட்சி சார்பில் அருண் சங்கர் சுக்லா ஆகியோர் போட்டியிட்டனர்.
பாலியல் வழக்கு
உன்னாவோ சட்டசபைத் தொகுதியின் எம்எல்ஏவாக தற்போது இருப்பவர் பாஜகவின் குல்தீப் சிங் சேங்கர். இவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு உள்ளிட்ட ஏகப்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர் நான்கு முறை எம்எல்ஏ ஆவார் என்பது கூடுதல் கொடுமை. இவர் தனது சொந்த கிராமமான மேகி கிராமத்தில் வைத்து மைனர் சிறுமியை பலாத்காரம் செய்ததாக கைதாகி பின்னர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி ஆனார். நல்லவேளை இப்போது இவர் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். இவர் மட்டுமல்ல இவரது மனைவி சசி மற்றும் மகன் சுபம் ஆகியோரும் சிறையில் உள்ளனர்.
வழிப்பறி
எம்பி தேர்தலில் போட்டியிடும் சாக்ஷி மகராஜ் உன்னாவோ லோக்சபா தொகுதியில் 3 முறை வெற்றி பெற்றவர் ஆவார். இவர் ஒரு பரம சாது. அதாவது சாமியார். ஆனால் இவர் மீது வழிப்பறி, கொள்ளை, கொலை, போர்ஜரி, 2 பலாத்கார வழக்குகள் உள்ளிட்ட 34 கிரிமினல் வழக்குகள் உள்ளன. எனக்கு யாராவது ஓட்டுப் போடாமல் போனால் அவர்களை நான் சபித்து விடுவேன் என்று வேறு இவர் சமீபத்தில் கூறி அலற வைத்தார்.
நில அபகரிப்பு
அடுத்த நபர் அருண் சங்கர் சுக்லா. இவரை செல்லமாக அந்த ஊரில் அன்னா (நம்ம ஊர் அண்ணா அர்த்தம் கிடையாது) என்று அழைப்பார்களாம். இவர் மீது ஏகப்பட்ட நில அபகரிப்பு வழக்குகள் உள்ளன.
பரபரப்பு புகார்
அடுத்தவர் காங்கிரஸின் அனு டாண்டன். இவர் சுவிஸ் வங்கியில் பல நூறு கோடி பணத்தைக் குவித்து வைத்துள்ளதாக ஒரு பரபரப்புப் புகார் உள்ளது. இதுதவிர மேலும் பல வழக்குகளும் அனுவை அலங்கரிக்கின்றன. கூடுதல் போனஸ் செய்தி ஒன்று - நாட்டில் உள்ள கிரிமினல் வேட்பாளர்களில் 18 சதவீதம் பேர் உபியை சேர்ந்தவர்கள் என்பதாகும்.
இப்ப சொல்லுங்க.. மக்கள் பாவம்தானே!