பாபர் மசூதி இடிப்பு வழக்கு.. குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் பதிவு
லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரித்து வரும் லக்னோவில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் வியாழக்கிழமை (ஜூன் 4) குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்யத் தொடங்கியது, இதில் பாஜக மூத்த தலைவர்கள் எல் கே அத்வானி, கல்யாண் சிங், உமா பாரதி, பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் சாக்ஷி மகாராஜ் ஆகியோரும் அடங்குவர்.
பாஜக மூத்த தலைவர் வினய் கட்டியார், முன்னாள் எம்பி ராம் விலாஸ் வேதாந்தி உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்களில் நான்கு பேர் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். விஜய் பகதூர் சிங்கின் வாக்குமூலத்தை நீதிமன்றம் பதிவுசெய்தது, மீதமுள்ளவர்களை வெள்ளிக்கிழமை(இன்று) ஆஜராகுமாறு அறிவுறுத்தியது.
அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணையை முடித்த பின்னர், சிஆர்பிசி 313 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் அறிக்கைகளையும் பதிவு செய்ய நீதிமன்றம் ஜூன் 4 உத்தரவிட்டிருந்தது. சிஆர்பிசி பிரிவு 313 இன் கீழ், ஒரு நீதிபதி விசாரணையின் போது நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரிடம் கேள்வி எழுப்ப முடியும்.
மேலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு சூழ்நிலைகள் மற்றும் அவர் மீதான குற்றச்சாட்டுகளை விளக்க வாய்ப்பு அளிக்கப்படும் அது முடிந்தபின், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆதாரங்களை முன்வைக்க அனுமதிக்கப்படும். அந்த வகையான நடைமுறைகள் தற்போது போய் கொண்டிருக்கின்றன
வழிபாட்டு தலங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு.. முழு விவரம்
முன்னதாக ராம் ஜென்பூமி- பாபர் மசூதி வழக்கில் 2019 நவம்பரில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியிருந்தது. அந்த தீர்ப்பில் ராமர் கோயிலை கட்டிக்கொள்ள அனுமதி அளித்தது. அதற்கு பதில் ஐந்து ஏக்கர் நிலத்தை மசூதி கட்ட அயோத்தியிலேயே அளிக்க உத்தரவிட்டது.
பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு:
1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர், இரண்டு எஃப்.ஐ.ஆர்கள் (முதல் தகவல் அறிக்கை) மசூதியை இடித்ததாகக் கூறப்படும் கார் சேவகர்கள் மீது போடப்பட்டது. எஃப்.ஐ.ஆர் எண் 197/92 எஃப்.ஐ.ஆர் எண் 198/92, ஆகிய இரண்டு முதல் தகவல் அறிக்கை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது . இதன் கீழ் அத்வானி, ஜோஷி, உமா பாரதி, உள்பட 47 மீது கர சேவகர்களைத் தூண்டியதாக வழக்குகள் அப்போது பதிவு செய்யப்பட்டன, அவை அனைத்தும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் இணைக்கப்பட்டன. பால் தாக்கரே பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆனால் அவர் இறந்த பிறகு அவரது பெயர் நீக்கப்பட்டது.