நாட்டை உலுக்கிய உ.பி சிறுமியின் கொடூர கொலை.. அதிர்ச்சியில் வாயடைத்துப்போன பிரபலங்கள்!
Recommended Video
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பெற்றோர் வாங்கிய கடனுக்காக 2 வயது சிறுதி மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பிரபலங்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள டாப்பல் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதி அப்பகுதியை சேர்ந்த ஜாகீத் மற்றும் அஸ்லாம் ஆகியோரிடம் பத்தாயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளனர். ஆனால் கடனை குறித்த நேரத்தில் திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜாகீத்தும் அஸ்லாமும் தம்பதியின் 2 வயது மகளை கடந்த 31ஆம் தேதி கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை சேதப்படுத்தி மூட்டையாக கட்டி அங்குள்ள குப்பையில் வீசியுள்ளனர்.
பிரபலங்கள் கண்டனம்
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர கொலைக்கு பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
|
பிரியங்கா காந்தி கண்டனம்
இந்நிலையில் இந்த குரூர கொலைக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவீட்டில், அலிகாரில் அப்பாவி குழந்தைக்கு நிகழ்ந்த மற்றொரு மனிதாபிமானமற்ற மிருகத்தனமான கொலை. அவளின் பெற்றோர் படும் துயரத்தை கற்பனை கூட செய்து பார்க்கமுடியவில்லை. நமக்கு என்ன ஆயிற்று? என பதிவிட்டுள்ளார் பிரியங்கா காந்தி.
|
சானியா மிர்சா கண்டனம்
இதுதொடர்பாக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பதிவிட்டுள்ள டிவிட்டில் மனிதாபிமானமற்ற மற்றும் காட்டுமிராண்டித்தனமான செயல்.. நீதி வழங்கப்பட வேண்டும்.. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் .. குழந்தையை இழந்த குடும்பதினர் எப்படி தாங்கிக்கொள்ள போகிறார்கள் என்பதை கற்பனை செய்துக்கூட பார்க்க முடியவில்லை.. என சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.
|
அபிஷேக் பச்சன் கண்டனம்
இதேபோல் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் பதிவிட்டுள்ள டிவிட்டில் டிவிங்கிள் ஷர்மா கொலை குறித்து கேட்டு வெறுப்பாகவும் கோபமாகவும் உள்ளது. எப்படி இப்படி ஒரு காரியத்தை ஒருவரால் செய்ய முடிகிறது. வார்த்தையே வரவில்லை. இவ்வாறு அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ட்ரென்ட்
இதனிடையே நேற்று டிவிங்கிள் ஷர்மாவுக்கு நீதி வேண்டும் என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரென்ட்டானது. இந்நிலையில் இன்று அலிகார் கொலை வழக்கு என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரென்ட்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.