பாகிஸ்தானுக்கு போக கூறிய எஸ்.பி.மீது நடவடிக்கை... மத்திய அமைச்சர் உறுதி
லக்னோ: உத்திரப் பிரதேசத்தில் குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்திய இஸ்லாமியர்களை, பாகிஸ்தானுக்கு சென்று விடுமாறு கூறிய எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி உறுதியளித்துள்ளார்.
குடியுரிமைச் சட்டத்தை திரும்பப்பெறக் கோரி மீரட்டில் இஸ்லாமியர்கள் கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சென்ற எஸ்.பி.அகிலேஷ் சிங், சாப்பிடுவது இங்கே, புகழ்பாடுவது மற்றவர்களுக்கா எனக் கேள்வி எழுப்பியதோடு, பேசாமல் பாகிஸ்தானுக்கு சென்றுவிடுமாறு கூறியிருந்தார்.
சர்ச்சை
எஸ்.பி.அகிலேஷ் சிங்கின் இந்தக் கருத்து இஸ்லாமியர்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எஸ்.பி.அகிலேஷ் சிங் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. இது தொடர்பான புகார் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியிடமும் கொண்டு செல்லப்பட்டது.
உறுதி
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பார்த்து பாகிஸ்தானுக்கு சென்று விடுமாறு கூறிய எஸ்.பி.அகிலேஷ் சிங் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தாமும் அது குறித்த தனது வருத்தத்தை யோகி ஆதித்யநாத்திடம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மிரட்டல்
மேலும், போராட்டக்காரர்களை பார்த்து எச்சரிக்கும் தொணியில் பேசிய எஸ்.பி.அகிலேஷ் சிங், இந்த நொடி முதல் உங்களுக்கு இருண்ட காலம் தான் என சவாலும் விடுத்திருந்தார். இதுவும் இஸ்லாமிய அமைப்புகளின் கடும் கண்டனத்தை பெற்றது.
வன்முறை
நாட்டில் காவல்துறையினரிடம் இருந்தோ, கும்பலிடம் இருந்தோ வன்முறை கருத்துக்களை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், குற்றமற்றவர்களின் மனது காயப்படக் கூடாது என்பதில் போலீஸ் கவனமுடம் இருக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.