ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு..சிபிஐ விசாரணைக்கு முதல்வர் யோகி உத்தரவு
லக்னோ: ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமையால் பெண் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யா நாத் உத்த்ரவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் உயர் ஜாதியைச் சேர்ந்த 4 பேர் கும்பலால் 20 வயது இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இடுப்பை உடைத்து, நாக்கை வெட்டி அந்த பெண்ணை கொடூரமாக பலாத்காரம் செய்ததாக உத்தரப்பிரதேசத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே உயிரிழந்த பெண்ணின் உடலை அவரது பெற்றோருக்கு தெரியாமலேயே போலீசார் எரித்து விட்டதாக கடும் சர்ச்சை ஏற்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்ற போது, அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். அப்போது ராகுலை போலீசார் நடத்திய விதம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே பல்வேறு தடைகளை தாண்டி ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினர்.
வென்றது போராட்டம்.. ஹத்ராஸில் ராகுல், பிரியங்கா.. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துடன் சந்திப்பு
அப்போது பிரியங்கா காந்தி கூறும் போது, " வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்கள் மகளை கடைசியாக ஒரு முறை பார்க்க முடியவில்லை என்று வருந்தினர். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது பொறுப்பை புரிந்து கொள்ள வேண்டும். நீதி வழங்கப்படும் வரை, இந்த போராட்டத்தை நாங்கள் தொடருவோம், இந்த சம்பவம் தொடர்பாக நீதித்துறை விசாரணை நடத்த வேண்டும். மாவட்ட ஆட்சி தலைவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர். அத்துடன் தங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பையும் விரும்புகிறார்கள்" என்றார்.
இந்நிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யா நாத் ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமையால் பெண் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.