குழந்தை கடத்தல் வதந்தி.. மனநிலை பாதித்தவருக்கு நேர்ந்த கொடூரம்.. வன்முறை கும்பல் வெறியாட்டம்
லக்னோ: குழந்தை கடத்துபவர் என நினைத்து மன நிலை பாதிக்கப்பட்டவரை கொடூரமாக அடித்துக் கொலை செய்த கும்பல் அவர் விபத்தில் இறந்தது போல் செட்டப் செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மை காலமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் குழந்தை கடத்தல் வதந்தி வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக சந்தேகப்படும்படியான நபர்களை மக்கள் ஆங்காங்கே அடித்து உதைத்து கொடூரமாக தாக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது.
குறிப்பாக உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி, ரேபரலி, மீரட், சாம்பல், ஜவுன்பூர், உன்னாவ் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 100க்கு மேற்பட்ட கும்பல் வன்முறை தாக்குதல் நடந்துள்ளது.
இந்நிலையில் அம்ரோகாவின் ஆதம்பூர் பகுதியில் உள்ளது தெக்ரி கடார் கிராமம். இந்த கிராமத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் நடந்து சென்றுள்ளார். அவரை பார்த்த ஒரு கும்பல் அவரை குழந்தை கடத்துபவர் என நினைத்து அடித்து உதைத்தனர். கும்பல் வன்முறை தாக்குதல் அந்த இடத்திலேயே மனநலம் பாதிக்கப்பட்டவர் இறந்து போனார். அதன் பின்னர் அந்த கொடூர கும்பல் அவரை விபத்தில் இறந்தது போல் செட்டப் செய்யும் வகையில் பாலத்தில் இருந்து கீழே உடலை தூக்கிவீசி விட்டு சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
என்கிட்ட தப்பா நடந்துக்கறான்.. சீக்கிரம் வாங்க.. பொய்யான புகார்.. மிரள வைத்த பெண்.. ஷாக் வீடியோ
முன்னதாக சாம்பல்பூர் மாவட்டத்தில் மருமகனுக்கு மருந்து வாங்க சென்ற சகோதரர்கள் இரண்டு பேரை குழந்தை கடத்துவோர் என நினைத்து ஒரு கும்பல் சரமாரியாக அடித்து உதைத்தது.இதில் படுகாயம் அடைந்த நிலையில் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
இதனிடையே உத்தரப்பிரதேச போலீசார் சட்டத்தை யாரும் கையில் எடுத்து வன்முறையில் ஈடுபட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது. குழந்தை கடத்தல் குறித்து சந்தேகம் இருந்தால் 100 நம்பருக்கு அழைக்க வலியுறுத்தி உள்ளது. இதனிடையே குழந்தை கடத்தல் வதந்தி பரப்பிவரும் 82 பேரை அடையாளம் கண்டுள்ள போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது.