இன்னும் 15 நாட்களில் பிறக்க போகும் குழந்தை.. முகத்தைக் கூட பார்க்காமலேயே இறந்த விமானி அகிலேஷ் குமார்
லக்னோ: கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த இணை விமானி அகிலேஷிற்கு இன்னும் 15 நாட்களில் குழந்தை பிறக்க போகும் நிலையில் அதன் முகத்தைக் கூட பார்க்காமல் சென்றுவிட்டதாக அவரது உறவினர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
Recommended Video
கோழிக்கோடு விமான நிலையத்தில் துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது. இதில் விமானி தீபக் வசந்த் சாத்தே, இணை விமானி அகிலேஷ் குமார் உள்பட 19 பேர் பலியாகிவிட்டனர்.
இந்த விபத்தில் இறந்த அகிலேஷுக்கு இன்னும் 15 நாட்களில் குழந்தை பிறக்க போகிறதாக அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தார்கள். யார் இந்த அகிலேஷ் என்பதை பார்ப்போம்.
ராஞ்சியில் விமானம் மீது பறவை மோதல்... நல்ல வேளையாக விபத்து தவிர்ப்பு... பயணிகள் தப்பினர்!!
கர்ப்பிணி மனைவி
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்தவர் அகிலேஷ் குமார் (32). இவரது மனைவி மேகா. இவர்களுக்கு 2017இல் திருமணம் ஆனது. மேகா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அகிலேஷிற்கு இரு இளைய சகோதரர்கள், ஒரு சகோதரி, பெற்றோர் உள்ளனர். லாக்டவுன் அறிவிப்பதற்கு முன்னர் தனது குடும்பத்தினரை பார்த்த அகிலேஷ் பின்னர் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை மீட்க சென்றுவிட்டார்.
அகிலேஷ்
இவர் நேற்று முன் தினம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த போது அவரை விமான குழுவினர் உற்சாகமாக வரவேற்றனர். இவர் ஏர் இந்தியாவில் 2017-ஆம் ஆண்டு முதல் விமானத்தை இயக்கி வருகிறார். வந்தே பாரத் திட்டத்தின் சார்பில் முதல் கட்டமாக கோழிக்கோடு- துபை- கோழிக்கோடு செல்ல மே மாதம் நடந்த மீட்பு பணிகளில் முதல் அதிகாரி அகிலேஷ்தான்.
கண்ணியமானவர்
இதனிடையே உயிரிழந்த அகிலேஷ் குறித்து உறவினர்கள் கூறுகையில் அகிலேஷுக்கு இன்னும் 15 நாட்களில் குழந்தை பிறக்கவிருக்கிறது. அந்த குழந்தையின் முகத்தைக் கூட பார்க்காமல் போய்விட்டாரே என கண்ணீர் மல்க தெரிவித்தார்கள். மேலும் இவர் நல்ல நடத்தை உள்ளவர், கண்ணியம், பணிவானர் என உடன் பணியாற்றியோர் தெரிவிக்கிறார்கள்.
30 ஆண்டுகள்
விமானி தீபக் வசந்த் சாத்தே மும்பையை சேர்ந்தவர். இவருக்கு 30 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. இந்த விபத்தில் இருவரும் தங்கள் உயிரை தியாகம் செய்து 180 பேரின் உயிர்களை காப்பாற்றினர். ஒரு வேளை எரிப்பொருளை காலி செய்யாமல் இருந்திருந்தால் விமானம் தீப்பற்றி எரிந்திருக்கும், பலி எண்ணிக்கையும் அதிகமாகியிருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.