ஆடையை கயிறாக கட்டி ஆஸ்பத்திரியில் இருந்து குதித்து தப்பி ஓடிய கொரோனா நோயாளி.. அதிர்ச்சி தகவல்
லக்னோ: டெல்லியில் உள்ள மார்கஸ் நிஜாமுதீனில் நடந்த மதக் கூட்டத்திற்குச் சென்ற தப்லிகி ஜமாஅத்தின் உறுப்பினராக உள்ள 60 வயது கொரோனா வைரஸ் நோயாளி நேற்று இரவு உத்தரபிரதேசத்தில் அரசு நடத்தும் மருத்துவமனையில் இருந்து தப்பினார்.
அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டின் ஜன்னல் பக்கத்தை உடைத்து, தனது சொந்த ஆடைகளை ஒரு கயிறு போல் வடிவமைத்து பயன்படுத்தி தப்பி ஒடிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி தப்லிகி ஜமாஅத் கூட்டத்தில் கலந்து கொண்ட நேபாளத்தைச் சேர்ந்த 17 பேர் கொண்ட குழுவினர் வெள்ளிக்கிழமை அன்று உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.
தப்பி ஓட்டம்
அந்த குழுவைச் சேர்ந்தவர் தான் 60 வயது கொரோனா நோயாளி. அவர் கயிறு போல் தனது ஆடைகளை கட்டி மருத்துவமனையில் இருந்து நேற்று இரவு தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவம் மருத்துவமனையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அருகில் உள்ள கிராமங்கள் வழியாக ஓடிப்போன அந்த நோயாளியை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதனிடையே அந்த நோயாளி நன்கு நடந்து கொண்டதாகவும் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தாகவும் , யாருக்கும் எந்த பிரச்சனையும் கொடுக்கவில்லை என்றும் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி ஆர்.கே.டாண்டன் கூறினார். ஆனால் அவர் ஏன் அவர் தப்பினார் என்பது தனக்கும் மற்றவர்களை போலவே ஆச்சர்யமாக இருப்பதாகவும் மருத்துவ அதிகாரி டாண்டன் கூறினார்.
டெல்லி கூட்டம் காரணம்
டெல்லியில் நடந்த மார்கஸ் நிஜாமுதீன் கூட்டம் இந்தியா முழுவதும் தற்போது உள்ள கொரோனா பரவலில் 30 சதவீத கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற தப்லீஜி ஜமாஅத்தின் உறுப்பினர்களை அனைத்து மாநிலங்களும் கண்காணித்து தனிமைப்படுத்தியுள்ளன, அவர்கள் எங்கெல்லாம் பயணம் செய்தனர், அவர்கள் யாருடன் தொடர்பில்இருந்தார்கள் என்பதை கண்டுபிடித்து தொடர்பு தடமறிதல் முறையில் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள்.
மாடியில் இருந்து குதிப்பு
இதனிடையே ஹரியானாவின் கர்னாலில் உள்ள ஒரு மருத்துவமனையின் ஆறாவது மாடியில் தனிமை வார்டில் இருந்து தப்பிக்க முயன்ற கொரோனா வைரஸ் அறிகுறி நோயாளி (55 வயது) உயிரிழந்தார். பெட்ஷீட்களைப் பயன்படுத்தி மாடியில் இருந்து கீழே இறங்க முயன்றபோது அந்த நபர் ஜன்னலில் இருந்து விழுந்தார். இதில் அந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சமூக விலகல் முக்கியம்
இந்தியாவில் கொரோனா வைரஸ தொற்றால் இதுவரை 4421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3981 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 114 பேர் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். 326 பேர் இதுவரை நாடு முழுவதும் கொரேனா பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு குணமடைந்துள்ளனர். மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று அரசுகள் அறிவுறுத்தி வருவதுடன் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன.