கொரோனா "ஹாட் ஸ்பாட்" பகுதிகளுக்கு மசூதிகளின் பெயர்.. ஆதித்யநாத் அரசின் மூவ்.. பெரும் எதிர்ப்பு!
உத்தர பிரதேசத்தில் 18 கொரோனா வைரஸ் ஹாட் ஸ்பாட் பகுதிகளுக்கு மசூதிகளின் பெயரை வைத்து அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
லக்னோ: உத்தர பிரதேசத்தில் 18 கொரோனா வைரஸ் ஹாட் ஸ்பாட் பகுதிகளுக்கு மசூதிகளின் பெயரை வைத்து அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முதல்வர் ஆதித்யாநாத்தின் இந்த செயல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடஇந்தியாவில் டெல்லி, குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. அதேபோல் உத்தர பிரதேசத்தில் கொரோனா வைரஸ் வேகம் எடுத்து வருகிறது, உத்தர பிரதேசத்தில் மொத்தம் 2645 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு 43 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவையே கொரோனா உலுக்கி உள்ள போது, இதே வைரஸ் தாக்குதலை வைத்து உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் மத ரீதியான தாக்குதலையும், அரசியலையும் செய்து வருகிறார்.
அரசு கூறி வருகிறது
இந்தியா முழுக்க கொரோனா வைரஸ் பரவ டெல்லியில் நடந்த மத கூட்டம்தான் காரணம் என்று ஆதித்யநாத் வெளிப்படையாக குறிப்பிட்டு பிரச்சனையை உண்டாக்கினார். உத்தர பிரதேசத்தில் எங்கெல்லாம் கொரோனா வைரஸ் பரவுகிறதோ அங்கெல்லாம் பின்னணியை தேடினால் டெல்லி மாநாடுதான் இருக்கிறது. அவர்கள் நாடு முழுக்க வைரஸை சுமந்து கொண்டு பரப்பி உள்ளனர். இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பெரிய சர்ச்சை
சட்ட ரீதியாக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது மட்டும் நடக்கவில்லை என்றால் நாம் கொரோனாவை கட்டுப்படுத்தி இருக்கலாம் என்று ஆதித்யநாத் குறிப்பிட்டு இருந்தார். இவரின் இந்த பேச்சு நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவே கொரோனாவால் முடங்கி உள்ளது. மக்கள் பலியாகிக் கொண்டு இருக்கிறார்கள். இப்போது போய் மத அரசியல் செய்கிறாரே என்று இவர் மீது பலர் புகார் வைக்க தொடங்கினார்கள்.
மசூதிக்களின் பெயர்கள்
ஆனால் இப்போது இன்னும் ஒருபடி மேலே போய் அவர் வேறு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி உத்தர பிரதேசத்தில் 18 கொரோனா வைரஸ் ஹாட் ஸ்பாட் பகுதிகளுக்கு மசூதிகளின் பெயரை வைத்து அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முதல்வர் ஆதித்யாநாத்தின் இந்த செயல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லக்னோவில் இருக்கும் முக்கியமான 18 ஹாட் ஸ்பாட் பகுதிகளுக்கு பிரபலமான மசூதிக்களின் பெயர்களை வைத்து உத்தரவிட்டுள்ளார்.
என்ன பெயர்கள்
அதன்படி லக்னோவில் சடார் பஜார் பகுதியில் உள்ள ஹாட்ஸ்பாட் பகுதிக்கு அலி ஜான் மசுதி ஹாட் ஸ்பாட் மற்றும் சுற்றுவட்டாரம் என்று பெயர் வைத்துள்ளார். அதேபோல் முகமதியா மசுதி ஹாட் ஸ்பாட் மற்றும் சுற்றுவட்டாரம், கஜுர் வலி மசுதி ஹாட் ஸ்பாட் மற்றும் சுற்றுவட்டாரம், நாசர்பாக் மசுதி ஹாட் ஸ்பாட் மற்றும் சுற்றுவட்டாரம் என்று வரிசையாக பிரபலமான மசூதிகளின் பெயர்களை ஹாட் ஸ்பாட் பகுதிகளுக்கு வைத்துள்ளார்.
காரணம் சொல்கிறார்கள்
இந்த ஹாட்ஸ் ஸ்பாட் பகுதிகளில் எல்லாம் அதிக அளவில் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். இங்கு சில இஸ்லாமியர்கள் டெல்லி மாநாட்டிற்கு சென்றதன் மூலம் கொரோனா பாதிப்பை அடைந்தவர்கள். சடார் பஜார் பகுதியில் பகுதியில் மட்டும் 95 பேருக்கு கேஸ்கள் உள்ளது. இதனால் இவர்களை எல்லாம் அடையாளப்படுத்தும் விதமாக அந்த பெயரை அரசு வைத்துள்ளது.
மோசமான விளக்கம்
இது தொடர்பாக விளக்கம் அளித்த பெயர் வெளியிட விரும்பாத உத்தர பிரதேச அரசு அதிகாரி ஒருவர், இது அரசின் நேரடி உத்தரவு. அவர்கள் எல்லோரும் அங்கிருந்துதான் வருகிறார்கள். அதனால் அவர்களை அப்படி அடையாளபடுத்துகிறோம். இதுதான் வசதியாக இருக்கும். அப்போதுதான் மக்களுக்கு கொரோனா நோயாளிகள் எங்கிருந்து வந்தனர், பின்னணி என்ன என்பது தெரியும் என்று கூறியுள்ளார்.
இந்துக்களும் இருக்கிறார்கள்
இந்த ஹாட் ஸ்பாட் பகுதியில் வேறுவேறு காண்டாக்ட் மூலம் கொரோனா பாதிக்கப்பட்ட இந்துக்களும் இருக்கிறார்கள். ஆனாலும் இந்த பகுதியை மசூதிகள் மூலம் அடையாளம் காணும் அரசின் திட்டம் பெரிய எதிர்ப்பை சந்தித்துள்ளது. இந்தியா மட்டுமின்றி மத்திய கிழக்கில் உள்ள அரபு நாடுகளும் கூட ஆதித்யநாத்தின் இந்த செயலை கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர்.