கொரோனா லாக்டவுன்: பிற மாநிலங்களில் இருந்து திரும்பிய 1 லட்சம் பேரை தனிமைப்படுத்த உ.பி. அரசு உத்தரவு
லக்னோ: கொரோனா லாக்டவுனால் பிற மாநிலங்களில் இருந்து திரும்பிய சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
Recommended Video
கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. லாக்டவுனால் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து பரிதவித்து வருகின்றனர்.
இதனால் வேறுவழியே இல்லாமல் பிற மாநிலங்களில் கூலித் தொழிலாளர்களாக இருப்பவர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புகின்றனர். வடமாநிலங்களில் அனைத்து போக்குவரத்து வசதிகளும் முடக்கப்பட்டதால பல நூறு கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்தே சொந்த ஊருக்கு செல்கின்றன பேரவலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
தலைநகர் டெல்லியில் இருந்து ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து நாட்டையே உலுக்கியுள்ளது. இனியும் டெல்லியில் வாழவே முடியாத என்கிற நிலையில் மூட்டை முடிச்சுகளுடன் அந்த பெருநகரை விட்டு வெளியேறி வரும் காட்சிகள் நெஞ்சை பிசைகின்றன.
இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்துக்குள் பிற மாநிலங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் கடந்த சில நாட்களில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் திரும்பியுள்ளனர். இதனால் இவர்கள் அனைவரையும் கொரோனா பரிசோதனைக்குட்படுத்தி வருகிறது அம்மாநில அரசு.
மேலும் மாநிலம் திரும்பிய 1 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கவும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.