கொரோனா தடுப்பூசி பெறுபவர்களின் பட்டியலில் உயிரிழந்த நர்ஸ்களின் பெயர்கள்... உபி-இல் பெரும் குழப்பம்
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்கட்டமாகத் தடுப்பூசி பெறுபவர்களின் பட்டியலில் உயிரிழந்த, ராஜினாமா செய்த நர்ஸ்களின் பெயர்களும் இடம்பெற்று பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களின் தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து வரும் சனிக்கிழமை முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளது.
இதற்காக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி விநியோகம் நேற்று தொடங்கியது. அதேபோல பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி விநியோகம் இன்று காலை தொடங்கியது.
தடுப்பூசி
முதல்கட்டமாக நாடு முழுவதும் உள்ள சுகாதார பணியாளர்கள் உட்பட முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளது. முதல்கட்டத்தில் தடுப்பூசி பெறுபவர்களை அடையாளம் காணும் பணிகளை தற்போது மாநில அரசுகள் எடுத்து வருகிறது. ஒவ்வொரு மாநில அரசும் தன் மாநிலத்திலுள்ள மருத்துவர்கள், நர்ஸுகள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களின் பட்டியலை தயார் செய்து வருகின்றன.
உத்தரப் பிரதேசத்தில் குழப்பம்
உத்தரப் பிரதேச அரசு தயார் செய்துள்ள இந்தப் பட்டியலில் தான் தற்போது மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. அயோத்தி சுகாதாரத் துறை தயார் செய்யப்பட்டுள்ள பட்டியலில் உயிரிழந்த, ஓய்வு பெற்ற மற்றும் ராஜினாமா செய்த நர்ஸுகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
நடவடிக்கை எடுக்கப்படும்
உத்தரப் பிரதேச அரசு தயார் செய்துள்ள பட்டியலில் இருக்கும் குழப்பம் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, இது குறித்து விசாரணை நடத்த அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் உத்தரவிட்டுள்ளார். இதில் தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
குழப்பம் ஏன்
இந்தப் பட்டியல் மூன்று மாதங்களுக்கு முன் தயார் செய்யப்பட்டது. இருப்பினும், தற்போது இதைச் சரி பார்த்து உயிரிழந்த, ஓய்வு பெற்ற மற்றும் ராஜினாமா செய்த நர்ஸுகளின் பெயர்களை நீக்க அலுவலர்கள் தவறியதாலேயே இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பணிகள்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் சுமார் 852 மையங்களில் வரும் 16ஆம் தேதி முதல் சுகாதார பணியாளர்களுக்குத் தடுப்பூசி அளிக்கப்படவுள்ளது. முன்னதாக கடந்த திங்கட்கிழமை உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் இருக்கும் சுமார் 1,500 மையங்களில் தடுப்பூசி வழங்கும் ஒத்திகையும் நடைபெற்றது.