இந்தியாவின் மிகப்பெரிய ராணுவ தளவாட உற்பத்தி மையமாகிறது உத்தர பிரதேசம்: மோடி பேச்சு
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று, நடைபெற்ற, டெஃப்எக்ஸ்போ 2020 (DefExpo 2020) எனப்படும் பாதுகாப்பு தளவாட கண்காட்சி தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: புதிய பாதுகாப்பு சவால்களைப் பார்த்து, பாதுகாப்புப் படைகள் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் 25 தயாரிப்புகளை உருவாக்குவதே நமது நோக்கம்.
பீரங்கித் துப்பாக்கிகள், விமானம் தாங்கி கப்பல், போர் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், லகுரக போர் விமானங்கள், போர் ஹெலிகாப்டர்கள் போன்றவை இதுபோன்ற பல உபகரணங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.
வரவிருக்கும் காலத்தில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறையின் மிகப்பெரிய மையங்களில் ஒன்றாக உத்தரபிரதேசம் இருக்கும்.
இந்திய பெருங்கடல் பிராந்திய பாதுகாப்பில் இந்தியாவுக்கு அதிக பொறுப்பு உள்ளது. நமது பாதுகாப்பு தளவாட தயாரிப்புகள் என்பது எந்த நாட்டுக்கும் எதிரானது கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.
Prime Minister Narendra Modi at DefExpo 2020 in Lucknow: Uttar Pradesh will be one of the biggest hubs of defence manufacturing in the coming future. pic.twitter.com/u4zuVRlC8a
— ANI UP (@ANINewsUP) February 5, 2020
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் டைனமடிக் டெக்னாலஜிஸ் லிமிடெட் ஆகியவை இன்று DefExpo 2020ல் IAIஇன் ஆளில்லா ஏரியல் வாகனங்களை சந்தைப்படுத்துதல், உற்பத்தி செய்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
ஐந்து நாள் மெகா கண்காட்சியில் 70 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் 172 வெளிநாட்டு ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 856 இந்திய பாதுகாப்பு நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தும்.