பாபர் மசூதி இடிப்பு தினம்.. நாடு முழுக்க பாதுகாப்பு அதிகரிப்பு.. அயோத்தியில் போலீஸ் குவிப்பு!
லக்னோ: பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுவதால் நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் அனைத்து பகுதிகளிலும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 27வது ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அயோத்தியில் பாபர் மசூதி 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் அமைப்பினர் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் பலரால் இந்த மசூதி இடிக்கப்பட்டது.
அந்த மசூதி இருந்த இடம் ராமர் கோவில் இருந்த இடம், அதுதான் ராமர் பிறந்த இடம் என்று கூறி இந்த மசூதி இடிக்கப்பட்டது. இந்த சம்பவம் இந்திய அரசியலையே புரட்டிப்போட்டது. அதோடு பல வருடங்கள் அயோத்தி வழக்கும் நடந்து வந்தது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் கடந்த சில வாரங்கள் முன் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானது. அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.இதனால் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 27வது ஆண்டு தினம் இன்று அனுசரிக்கபபடுகிறது. இதனால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக அயோத்தி நகரம் முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மத ரீதியான பிரச்சனை என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கலவரம் நடக்க வாய்ப்புள்ள இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உளவுத்துறை சமூக வலைத்தளங்களை தீவிரமாக கவனித்து வருகிறது.
கோவில்கள், மசூதிகள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ், துணை காவல் படையினர் எல்லோரும் பாதுகாப்பு பணியில் இறங்கி உள்ளனர். முக்கிய இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
டெல்லி, மும்பை, லக்னோ, பாட்னா ஆகிய பகுதிகளில் இயல்பைவிட கூடுதலாக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.