உ.பி.யில் எங்களுக்கு நீங்க வேணாம்... தேர்தல் கூட்டணியில் காங்கிரசை கை கழுவிய சமாஜ்வாதி
லக்னோ: லோக்சபா தேர்தலின் போது, உத்தரப்பிரதேசத்தில் பாஜகவை தோற்கடிக்க சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணியே போதும், காங்கிரஸ் தேவையில்லை என்று சமாஜ்வாதி கட்சி கூறியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளதால் மத்தியில் யார் ஆட்சி அமைப்பது என்பதில் இந்த மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பாஜக 71 இடங்களையும், அதன் கூட்டணி கட்சியான அப்ணா தளம் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.
ஆனால் கடந்த ஆண்டு அங்கு நடைபெற்ற 3 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் பாஜக, எதிர்க்கட்சிகளிடம் தோல்வி அடைந்தது. இந்நிலையில் விரைவில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் அம்மாநிலத்தின் முக்கிய கட்சிகளான சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி சேர முடிவு செய்துள்ளன.
இரு கட்சிகளும் தலா 37 தொகுதிகளில் போட்டியிடுவது என்று முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கூட்டணியிலிருந்து காங்கிரஸ் தனித்து விடப் பட்டுள்ளதால் தனியாக போட்டியிடலாமா என்று வியூகம் அமைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் தேசிய துணைத் தலைவர் கிரண்மொய் நந்தா பேசுகையில், உத்தரபிரதேசத்தில் பாஜகவை தோற்கடிக்க சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணியே போதும். காங்கிரஸ் தேவையில்லை.
உத்தரபிரதேச மாநிலத்தை பொறுத்தவரையில் காங்கிரஸ் ஒரு முக்கியமற்ற கட்சியாகும். எனவே அதனை இணைப்பது தொடர்பாகவும், நீக்குவது தொடர்பாகவும் எதனையும் யோசிக்கவில்லை.
கூட்டணியில் காங்கிரஸ் சேர்ந்தால் 2 தொகுதிகள் வழங்கப்படும். இதுதொடர்பாக காங்கிரஸ்தான் முடிவு எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.