முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் பாஜகவில் இணைந்தார்.. மீண்டும் ராஜ்யசபா எம்பியாகிறார்
லக்னோ: தனது ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினமா செய்துவிட்ட முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஜ் சேகர் சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்குப் பின்னர் பல கட்சிகளில் இருந்தும் கொத்து கொத்தாக பாஜகவில் இணைந்து வருகின்றனர். மேற்கு வங்காளத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மட்டுமல்லாது வார்டு உறுப்பினர்கள் வரை தங்களது பதவிகளையும், கட்சிப் பொறுப்புகளையும் உதறிவிட்டு பாஜகவில் ஐக்கியமாகி வருகின்றனர்.
கோவாவிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஜ் சேகரும் பாஜகவில் இணைந்துள்ளார்.
பாஜக தீவிர முயற்சி
மக்களவையில் பெரும்பான்மை பலத்தை விட அதிகமாகவே எம்.பி.க்கள் கொண்டுள்ள பாஜகவுக்கு ராஜ்யசபாவில் போதிய எம்.பி.க்கள் இல்லை. ஆகவே அடுத்த ஆண்டுக்குள் ராஜ்யசபாவில் தங்களுக்கு பெரும்பான்மை கொண்டுவர பாஜக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குஜராத்தில் இரு மாநிலங்களவை இடங்கள் காலியாகின. நியாயமாக இதில் ஒன்று காங்கிரசுக்கு கிடைத்திருக்க வேண்டிய சூழலில் ஒரு இடத்திற்கு ஒரு நாளிலும் மற்றொரு இடத்திற்கு வேறொரு நாளிலும் தேர்தல் நடைபெற்றது.
நீரஜ்சேகர் ராஜினாமா
இந்த தேர்தல் முறையால் இரு இடங்களிலும் பாஜக வேட்பாளர்களே தேர்வாகினர். இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவராக உள்ள நீரஜ் சேகர் அக்கட்சியின் ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டுதான் முடிவடைய உள்ளது. ஆனால் ஓராண்டுக்கு முன்னரே நீரஜ் சேகர் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்.
அப்பாவின் தொகுதிக்கு மறுப்பு
நீரஜ் சேகர் அவரது தந்தையும் முன்னாள் பிரதமருமான சந்திர சேகரின் தொகுதியான பாலியாவில் கடந்த 2007 இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து, அதே தொகுதியில் 2009 தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து நீரஜ் சேகர் இம்முறையும் பாலியா மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்பியுள்ளார். ஆனால் அதற்கு அகிலேஷ் தரப்பு மறுப்பு தெரிவித்ததாகவும் தெரிகிறது. இதைத்தொடர்ந்தே இருவருக்கும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மீண்டும் எம்பியாகிறார்
இதன் காரணமாக தற்போது ராஜ்யசபா உறுப்பினராக உள்ள நீரஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரது ராஜினாமாவை துணை சபாநாயகர் வெங்கையா நாயுடு ஏற்றுக் கொண்டுள்ளார். நீரஜ் சேகர் பாஜகவில் இணையவுள்ளார். இதற்காக அவர் பிரதமர் மோடியையும், பாஜக தலைவர் அமித்ஷாவையும் சந்தித்து பேசினார். இந்நிலையில் இன்று முறைப்படி அவர் பாஜகவில் இணைந்தார். விரைவில் பாஜக சார்பில் ராஜ்யசபா எம்பி ஆக தேர்வு செய்யப்பட உள்ளார். உத்திரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலத்தோடு எம்.எல்.எ.க்கள் உள்ளதால் நீரஜ் சேகர் உ.பி.யில் இருந்து தேர்வு செய்யப்படுகிறார். இப்படியாக நீரஜ் மூலம் ராஜ்யசபாவில் பாஜகவின் பலம் ஒன்று அதிகரிக்கிறது.