மேட்டருக்கு வந்த பாஜக.. முதல் முஸ்லிம் வேட்பாளர்.. யார் இந்த ஹைதர் அலிகான்.. அகிலேஷூக்கு செக்?
முதல் முஸ்லிம் வேட்பாளர் ஹைதர் அலிகானை பாஜக கூட்டணி நிறுத்தி உள்ளது
லக்னோ: பாஜகவின் கூட்டணி கட்சியான அப்னா தளம், 2014 முதல் இதுவரையிலான காலத்தில் இப்போதுதான் முதல்முறையாக முஸ்லிம் ஒருவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.. யார் அவர்? இதன்மூலம் பாஜகவுக்கு முஸ்லிம் வாக்குகள் பெருவாரியாக வெற்றி கிட்டுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கின்றன. பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதிவரை 7 கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது..
மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது.. பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி என தேர்தலில் 4 முனை போட்டி நிலவினாலும், பாஜகவுக்கும் சமாஜ்வாதிக்கும்தான் நேரடியாக போட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஒரு பக்கம் அகிலேஷ்.. மறுபக்கம் மாயாவதி.. இன்னொரு பக்கம் பிரியங்கா.. வெற்றிக்காக பாஜக பக்கா வியூகம்
சாதி, மதம்
இந்திய அரசியலை பொறுத்தவரை, சாதி ஆதிக்கம், சாதிய ஒடுக்குமுறை, சாதிய வன்முறைகள், இப்படி பல பெயர்களை வைத்துதான் வடமாநிலங்களில் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக வடமாநிலங்களான பீகார், உபியில் சாதீய அழுக்கு நிறையவே படிந்துள்ளது.. இதற்கு காரணம், போதுமான மற்றும் பரவலான கல்வியறிவு அவர்களுக்கு கிடைக்காததுதான்.
மதம்
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக உத்திரபிரதேசம் கருதப்பட்டாலும், அம்மாநில தேர்தல்களில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் சாதிகள்தான் முக்கிய பங்கை வகித்து வருகின்றன என்பது கசப்பான உண்மையாகும். சமீபத்தில் வெளியான 3 அமைச்சர்கள் ஓபிசி எனப்படும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆவர்.. அதாவது, யோகி ஆட்சியில் ஓபிசி மற்றும் தலித் சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டுவிட்டனர் என்கிற குற்றச்சாட்டை அவர்கள் முன்வைத்துள்ளனர்.. இந்த குற்றச்சாட்டை அகிலேஷ் யாதவ் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டுவிட்டார்.
முஸ்லிம்கள்
அதேபோல, முஸ்லிம்களின் வாக்குகளை குறி வைத்தும் அரசியல் இங்கு நகர்கிறது.. குறிப்பாக இஸ்லாமியப் பெண் வாக்காளர்களை கவரும் வகையில் புதிய திட்டம் ஒன்றை ஆர்எஸ்எஸ் கையில் எடுத்துள்ளதாகவும், இஸ்லாமிய பெண்களின் நலனை காப்பதற்காக பாஜக எடுத்துள்ள நடவடிக்கைகளை விவரிக்கும் வகையில் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்ய ஆர்எஸ்எஸ் முஸ்லிம் பிரிவு திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வந்தன.
கூட்டணி கட்சி
இப்போது அடுத்தக்கட்டத்துக்கு பாஜக நகர்ந்துள்ளது.. இக்கூட்டணியில் உள்ள அப்னா தளம் சார்பில் ராம்பூர் மன்னர் குடும்பத்தை சேர்ந்த ஹைதர் அலி கான் என்பவர் சூயர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 36 ஆகிறது.. காங்கிரஸ் முன்னாள் எம்பி பேகம் நூர் பானுவின் பேரன்தான் இவர்.. பிரிட்டனில் படித்திருக்கிறார்..
மறுப்பு
இவரை காங்கிரஸ் கட்சி கடந்த 13-ம் தேதி சூயர் தொகுதி வேட்பாளராக அறிவித்தது.. ஆனாலும் அதை ஹைதர் அலி ஏற்கவில்லை.. மறுத்துவிட்டார்.. அதற்கு பிறகு அனுப்ரியா படேல் தலைமையிலான அப்னா தளம் கட்சியில் சேர்ந்தார்... சூயர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் ராம்பூர் எம்பி ஆசம் கானின் மகன் அப்துல்லா ஆசம் நிறுத்தப்படலாம் என்று ஒரு பேச்சு உள்ளது.. எனவேதான், அங்கு அப்னா தளம் வேட்பாளராக ஹைதர் அலி கான் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார்.
புது வேட்பாளர்
2014 தேர்தலுக்குப் பிறகு பாஜக கூட்டணியில் அறிவிக்கப்படும் முதல் முஸ்லிம் வேட்பாளர் ஹைதர் அலிதான்.. கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தலில் 11 வேட்பாளர்களை அப்னா தளம் நிறுத்திய போதிலும், அதில் முஸ்லிம் சமூகத்தினர் இடம்பெறவில்லை... கடந்த தேர்தலில் 9 இடங்களில் அப்னா தளம் வெற்றி பெற்ற நிலையில், தற்போது அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், இஸ்லாம் சமூகத்தினருக்கான வாய்ப்பும் கிடைத்ததுபோல் சீட் தரப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு
இந்நிலையில், ஹைதர் அலி கான் முக்கிய குற்றச்சாட்டு ஒன்றினை எதிர்க்கட்சிகள் மீது வைத்துள்ளார்.. செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், "என் மீது நம்பிக்கை வைத்து, வாய்ப்பு கொடுத்த பாஜகவுக்கு மிக்க நன்றி... இறைவன் விரும்பினால் நான் இந்த தொகுதியில் வெற்றி பெறுவேன்... பாஜகவில் முஸ்லிம்களுக்கு இடமில்லை என்று எதிர்க்கட்சி தலைவர்கள் பொய் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.. பொதுமக்களை தவறாகவும் வழிநடத்துகிறார்கள்... தலித், முஸ்லிம் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் யார் சரி, யார் தவறு என்பதை புரிந்து கொண்டுள்ளனர்" என்றார்.
Recommended Video
சிறுபான்மை
சிறுபான்மையினருக்கான உரிமை, பாதுகாப்புகள் பாஜக ஆட்சியில் இல்லை என்றும், அவர்கள் மீதான தாக்குதலை பாஜக முன்னெடுத்து வருவதாகவும் சமீபகாலமாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், பாஜக அதற்கான பதிலடியை தருவதற்கு தன்னை தயார் படுத்தி வருகிறது.. முஸ்லிம் ஓட்டுக்களை அள்ளுவதற்கான யுக்திகளையும் கையில் எடுத்து வரும் நிலையில், ஹைதர் அலிகான் எந்த அளவுக்கு வெற்றி வாய்ப்பினை பாஜகவுக்கு பெற்று தருவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.